இந்தியாவின் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமேட்டோ. தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் சோமேட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்து, அந்த உணவு சரியான நேரத்துக்கு வந்து சேரவில்லை என்பதால் கஸ்டமர் கேரில் புகார் அளித்துள்ளார்.
அதற்கு சோமேட்டோ கஸ்டமர் கேர் அதிகாரி அளித்த பதில் சர்ச்சைக்குள்ளாகியது. அவர் கூறீயதாவது:
''உங்கள் பிரச்சனையை இந்தியில் கூறுங்கள். அப்போதுதான் நீங்கள் அந்த உணவுக்கு செலுத்திய பணம் திரும்பப் கிடைக்கும். இந்தியராக இருந்து கொண்டு தேசிய மொழி இந்தி தெரியவில்லை என கூறுகிறீர்கள் கொஞ்சமாவது ஹிந்தி கற்றுகொள்ளுங்கள்''
–இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்ததாக வந்த தகவலையைடுத்து பலதரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இதுகுறித்து , சோமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்து சோமேட்டோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.
உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம்.
–இவ்வாறு சோமேட்டோ பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது..