குஜராத்தில் இன்று காலையில் அடுத்தடுத்து 2 மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடிந்தனர்.
இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்;
குஜராத்தில் கீர் மாவட்டத்தில் முதலில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலா கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு விராவல் என்ற ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலாலா கிராமத்தில் அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனால், தூங்கிக்கொண்டிருந்த மக்கள் திடீரென விழிப்புற்று தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் உயிரிழப்பு அல்லது பெருத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கீர் பகுதியில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் காலை 6.58 மணிக்கு ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. தலாலா கிராமத்திலிருந்து 13 கி.மீ வடகிழக்கே உள்ள காந்திநகரை மையமாக கொண்ட பகுதியில் பதிவானது. அதேபோல் மற்றொரு நிலநடுக்கம், தலாலாவில் இருந்து 9 கி.மீ வடகிழக்கே மையமாகக் கொண்ட பகுதியில் இன்று காலை 7.04 மணிக்கு பதிவானது.
-இவ்வாறு தேசிய புவியியல் ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.