"கடவுள் தன்னுடைய பிரதிநிதியாக தாயைப் படைத்தான்" என்று தாய்மையின் பெருமையைக் குறிப்பிடுவதுண்டு. உறவுகளிலேயே மிக உன்னதமானது தாயின் விலைமதிப்பற்ற அன்பு. வெறும் உயிராக ஜனிக்கும் நமது அடையாளங்களை வடிவமைப்பதிலும், நமது கனவுகளை வளர்ப்பதிலும், இரக்கம் மற்றும் நெகிழ்ச்சியின் மதிப்புகளை நமக்குள் விதைப்பதிலும் அன்னையின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
அன்னையின் அருமை பெருமை தியாகங்கள் மற்றும் இணையற்ற அன்புக்கு நன்றியுடன் பாராட்டுகளை வெளிப்படுத்தும் தினமாக "அன்னையர் தினம்" மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகளவில் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினத்தின் வரலாறு பண்டைய கிரேக்க நாகரிகத்தில் கடவுள்களின் தாயான ரியா தேவியை கௌரவிக்கும் வசந்த காலத்தின் கொண்டாட்டத்திற்கு முந்தையதாகிறது. மேலும், இது ஐக்கிய இராச்சியத்தில் "மதர்ரிங் ஞாயிறு" என்று பிரபலமாக கொண்டாடப்பட்டு தேவாலயத்திற்குச் சென்று ஞானஸ்நானம் பெறுவதற்கான ஒரு நாளாகவும் மக்களால் நிகழ்த்தப்பட்டது.
இதன் பின்னான அன்னையர் தினத்தின் தொடக்கங்களாக ஜூலியா வார்ட் ஹோவ் மற்றும் அன்னா ஜார்விஸ் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர். 1870 ஆம் ஆண்டில், ஜூலியா வார்டு ஹோவ் என்பவர் ஆண்டுதோறும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 1908 ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்வலர் அன்னா ஜார்விஸ் தனது தாயை கௌரவிக்கும் வகையில் நினைவுச் சேவையை நடத்தினார். இது அவரது தாயின் பிறந்தநாள். 407 குழந்தைகள் மற்றும் தாய்மார்களை ஈர்த்த ஒரு தேவாலய சேவையை ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து அன்னையர் மீதான கவனம் அதிகமாகி உலகின் பல பகுதிகளில் அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என்று அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நாள் பற்றிய கொண்டாட்டங்கள் விரைவாக தேசிய எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவியது. இன்று, உலகம் முழுவதும் 50 நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு (12-05-2024) அன்னையர் தினத்தில் நம்மைப் பெற்று வளர்த்த அன்னையருக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
வாழ்த்து அட்டைகள், பூக்கள் அல்லது கேக்குகளை வழங்குதல். குடும்பத்தினரின் கூடுகைகள் அல்லது வருகைகள், தனிப்பட்ட நலம் பகிரும் ஆறுதலான தொலைபேசி அழைப்புகள், வீட்டில், ஒரு ஓட்டலில் அல்லது உணவகத்தில் குடும்பத்துடன் மகிழும் உணவுகள், மனம் கவர்ந்த அன்னையருக்காக நம் மனம் திறந்த மடல்கள், கவிதைகள் அவருக்கு பிடித்த சாக்லேட், நகைகள், அணிகலன்கள், ஆடை, பொழுதுபோக்கு உபகரணங்கள் அல்லது கருவிகள், கையால் செய்யப்பட்ட பொருட்கள் அல்லது பரிசு வவுச்சர்களின் பரிசுகள் ,பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற எண்ணற்ற வழிகளில் நன்றியுடன் நமது அன்பைத் தெரிவித்து அன்னையின் மனதை மகிழ்வித்து மகிழ்வோம்.
அன்னையர் தினத்தன்று மட்டுமின்றி எப்போதும் நமது அன்னையின் அன்பைப் புரிந்து அவர்களுடன் நமது நேரங்களை செலவிடுதலே அவர்களுக்கு நாம் தரும் கௌரவம்.