விளையாட்டு

சிக்கலில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!

கல்கி டெஸ்க்

டப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேட்டியில் , இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், ஹாங்காங், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தப் போட்டி வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை 15 முறை நடைபெற்ற ஆசியகோப்பை தொடரை, 7 முறை இந்திய அணி கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய –பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தன. ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால் கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கோ, இந்திய அணி பாகிஸ்தானுக்கோ பயணம் மேற்கொள்வது நிறுத்திக்கொள்ளப்பட்டது. ஆயினும், ஐசிசி சார்பில் நடத்தப்படும் ஆசியகோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் மட்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில்தான், நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு உடனே, ‘இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது’ என்று  பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனால், நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய பங்கேற்பதில் சிக்கல் இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து, பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால், இந்திய அணி பங்கேற்பதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனாலும், ‘ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்துவதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்திய அணிக்கான லீக் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானிலேயே நடைபெறும்’ என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், ஆசிய கோப்பை குறித்தான பாகிஸ்தானின் நிலைப்பாட்டை, அதாவது இந்திய அணிக்கான லீக் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்ற ஹைப்ரிட் (hybrid model) யோசனையை  ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் நிராகரித்து இருக்கின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஹைப்ரிட் முறையின் கீழ் 2023 ஆசிய கோப்பையின் நான்கு அல்லது ஐந்து போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ளவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடப்படும் என்றும் கூறப்பட்டது.

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் ஹைப்ரிட் மாடலை நிராகரித்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது. இதனால், ஆசிய கோப்பை தொடரை நடத்த பாகிஸ்தானுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், அவர்கள் இலங்கையில் போட்டியை நடத்த வேண்டும். இதற்கு இதில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும். மூன்று நாடுகளும் பாகிஸ்தான் முன்மொழிந்த ஹைபிரிட் மாடலை நிராகரித்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலக வாய்ப்புள்ளது. இது நடந்தால், ஆறு அணிகள் மட்டும் பங்கேற்கும் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

வாழை இலை விருந்தின் நாகரிகம் தெரியுமா?

பிளாக் காபியின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

மன அமைதியைத் தரும் அதிகாலை தியானம்!

ஆந்தைகள் இரவில் பார்ப்பது எப்படித் தெரியுமா?

வளர்சிறார்கள் வளர்சிதை மாற்றம் சிறப்புடன் நடைபெற உட்கொள்ள வேண்டிய உணவுகள்!

SCROLL FOR NEXT