அகத்தி கீரை 
ஆரோக்கியம்

அகத்திக்கீரையின் அருமை தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

மிழ்நாட்டில் அதிகமாக விளையும் அகத்திக் கீரையின் பிறப்பிடம் மலேசியா. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கயானா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அதிகம் விளைகிறது. மலேசியா நாட்டில் இதை, ‘தூரி’ என்கிறார்கள். கயானா நாட்டில், ‘ஆகஸ்ட் மலர்’ என்கிறார்கள். இந்தியா முழுவதும் பயிரிடப்படும் ஒரு கீரை வகை அகத்தி.

அகம்+தீ+கீரை என்பதே அகத்திக்கீரையாகும். அதாவது, உடம்பிலுள்ள உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை இந்தக் கீரைக்கு இருப்பதால்தான், அகத்திக்கீரை என்று பெயராம்.

வெற்றிலை கொடிக்கால் படர அகத்தி மரங்கள் வளர்க்கப்படுவது வழக்கம். மிளகு தோட்டங்களில் மிளகு கொடி பரவும் அகத்தி மரங்கள் வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் மிளகாய், வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு நிழல் தரும் மரமாக அகத்தி வளர்க்கப்படுகின்றன. கரிசல் மண்ணில் நன்கு வளரும் இந்த மரத்தை வாழை போல எல்லா காலங்களிலும் பயிரிடலாம். அகத்தி மரங்கள் வளர்க்க விரும்புவோர் அதன் விதைகளை விதைப்பதற்கு முன் இரவில் பசும்பாலில் ஊறவைத்து விதைத்தால் விளையும் அகத்திக் கீரையின் கசப்பு தன்மை குறையும் என்கிறார்கள்.

அகத்தி மரங்கள் வேகமாக வளரும். ஒரு வருடத்திற்கு 6 மீட்டர் வளரும். அதிகபட்ச உயரம் 10 மீட்டர்கள். ஆழமான வேர்களைக் கொண்ட அகத்தி மரங்கள் 5 ஆண்டுகள் பலன் கொடுக்கும். மாடுகளுக்கு மிகச்சிறந்த தீவனம். அகத்தியில் இரண்டு வகை உண்டு ஒன்று சிவப்பு பூ வகை, மற்றொன்று வெள்ளை நிற பூ வகை. அகத்தி மரங்களைக் கொண்டு ஆரம்பத்தில் துப்பாக்கி பவுடர் (gun powder) தயாரித்தார்களாம்.

கீரைகள் என்றாலே அனைத்துமே சத்துக்கள் நிறைந்ததுதான் என்றாலும், அகத்திக்கீரை சற்று அதிக நன்மைகளையே தருகிறது 50க்கும் மேற்பட்ட உயிர்ச்சத்துகள் கொண்டதுதான் இந்த அகத்திக்கீரை. 100 கிராம் கீரையில், 90000 உயிர்ச்சத்தான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதாவது, 10 டம்ளர் பாலிலும், 5 முட்டையிலும் உள்ள சுண்ணாம்புச்சத்து, இந்த ஒரே ஒரு கட்டு அகத்திக்கீரையில் உள்ளதே இதன் ஸ்பெஷாலிட்டியாகும். அகத்தி கீரையில் அதிகளவில் புரோட்டீனும் உள்ளது.

எனவே, பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர். வீக்கம், வாயு பிடிப்பு போன்றவற்றுக்கு அகத்திக் கீரையின் சாறு மருந்தாகிறது. அகத்திப் பட்டை பேதியையும், மலேரியா போன்ற காய்ச்சலை கட்டுபடுத்தும். இந்த கீரையை, தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, தேமல்கள் மீது பூசினால், தேமல்கள் மறையும். சேற்று புண்களிலும் இந்த சாறு தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

அகத்திக் கீரையின் சாறு மங்கி வரும் கண் பார்வையை பிரகாசமாக்கும். இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்ணாடியே அணிய தேவையில்லை. அத்தனை கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை இந்த கீரை தீர்க்கிறது. மேலும் வாய்ப்புண், வயிற்று புண்களை ஆற்றும்.

சரும ஆரோக்கியத்தை இந்தக் கீரைகள் காக்கின்றன. அந்த வகையில், சரும அரிப்பு, சரும நோய்கள், சிரங்குகளை விரட்டிக்கூடியது. இந்த கீரையை வேக வைத்து, பேஸ்ட்போல அரைத்து, உடலில் ஏற்படும் காயங்களின் மீது கட்டினால், விரைவில் காயங்கள் ஆறிவிடும்.

இரும்புச்சத்து நிறைந்த இந்தக் கீரை முருங்கைக்கீரை போலவே மிகவும் முக்கியமானதாகும். எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலத்தை தரக்கூடியது. அதனால்தான், குழந்தை பெற்ற பெண்களுக்குக்கூட இந்த அகத்திக்கீரையை அதிகமாகத் தருவார்கள். இதை குறிப்பிட்ட அளவு சாப்பிடும்போது, தாய்ப்பால் அதிகமாக பெருகும். பால் வளம் பெருக்கும் சக்தி உள்ளதால்தான், ஆடு, பசு போன்ற கால்நடைகளுக்கு இந்த அகத்திக்கீரையை தீவனமாகத் தருகிறார்கள்.

இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் இந்தக் கீரையை வாரம் ஒருமுறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு இந்தக் கீரையை சமைத்துத் தரக் காரணமே, நல்ல மூளை வளர்ச்சியை தரக்கூடியதாம். உடலுக்கு உறுதியையும், ஆற்றலையும் தரக்கூடியது. எனவே, இந்தக் கீரையில் சூப் வைத்து பிள்ளைகளுக்கு தரலாம். மேலும், வயிற்றில் பூச்சிகள் இருந்தாலும் இந்த கீரை வெளியேற்றிவிடும்.

ஆனால், மற்ற கீரைகள் அளவுக்கு அகத்திக்கீரையை பலரும் விரும்புவதில்லை. இதற்குக் காரணம், இந்த கீரை லேசாக கசப்பு, துவர்ப்புடன் இருக்கும் என்பதால்தான். முற்றின கீரையை சமைக்காமல், இளசான கீரையை தேர்ந்தெடுத்து, தேங்காய்ப்பால் ஊற்றி சமைத்தால், கசப்பு தெரியாது. இந்த கீரையில் வாய்வுத்தன்மை உள்ளதால், பெருங்காயத்தையும் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். மதிய நேரத்தில் மட்டுமே இந்த கீரையை சாப்பிட வேண்டும்.

அகத்திக் கீரை மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது என்பதால், சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக் கூடாது. சிக்கனுடனும் சேர்த்து சாப்பிடக் கூடாது. மது அருந்திவிட்டு கீரையை சாப்பிட்டால் மாரடைப்பு வந்துவிடுமாம்.

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT