குழந்தைகளின் பால் பற்கள், நிரந்தரப் பற்களைக் காட்டிலும் வெண்மையாகவும், அழகாகவும் காணப்படும். சில குழந்தைகளுக்கு பல் முளைப்பதில் தாமதம் ஏற்படும். அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பற்கள் முளைக்கும்போது ஈறுகளில் உறுத்தல் இருக்கும். இதனால் கையில் கிடைத்ததையெல்லாம் குழந்தை வாயில் போட்டுக் கொள்ளும். இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படலாம். பெற்றோர்கள் இந்தத் தருணத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பல் முளைக்கும் நேரத்தில் குழந்தைகளின் ஈறுகள் சிவந்தும், வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு காய்ச்சல், வலி போன்றவையும் ஏற்படலாம். பல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்துகொள்ள பிரச்னைகளை சமாளிக்கலாம்.
பால் குடிக்கும் குழந்தைகளை அப்படியே தூங்க வைக்கக் கூடாது. இதனால் பாக்டீரியாக்கள் பரவி பால் பற்களில் சொத்தை ஏற்பட வாய்ப்பு உண்டாகும். இதனை, ‘நர்ஸிங் பாட்டில் கேரிஸ்’ என்பர். எனவே, பால் குடித்ததும், குழந்தைகளின் வாயை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
குழந்தைகள் பால் குடித்த பிறகு தண்ணீர் கொடுத்தோ அல்லது ஈரப் பஞ்சினால் வாயையையும், பற்களையும் துடைத்து விட்டு சுத்தம் செய்தல் அவசியம். இதனால் பற்சிதைவு தடுக்கப்படும். கூடுமானவரை இனிப்பு வகைகளை குழந்தைகளுக்குக் கொடுக்காமல் இருப்பது நல்லது.
காய்கறிகள், பழங்கள், நட்ஸ் என சத்தானவற்றைக் கொடுக்க குழந்தைகளின் உடல் நலத்திற்கும், பற்களின் பாதுகாப்பிற்கும் நல்லது. பால் பற்களின் வேருக்கு அடியில்தான் நிரந்தரப் பற்களின் பல் மொட்டு உள்ளது. பல் மொட்டு வளர வளர பால் பற்களின் வேர் அரிக்கப்பட்டு, பால் பற்கள் விழுந்து விடும். அந்த இடத்தில் நிரந்தரப் பற்கள் வளரத் தொடங்கும். நிரந்தரப் பற்களின் சரியான வளர்ச்சிக்கு, குழந்தைகளின் பால் பற்களை முறையாகப் பராமரிப்பதும், பாதுகாப்பதும் அவசியம் ஆகும்.