Importance of Polio Vaccination
Importance of Polio Vaccination https://tamil.oneindia.com
ஆரோக்கியம்

நாளை தமிழகம் எங்கும் போலியோ தடுப்பூசி முகாம்: தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

கண்மணி தங்கராஜ்

மிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் நாளை (மார்ச் 03) போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்குகிறது. மேலும், 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

போலியோ வைரஸ் என்றால் என்ன?

உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் போலியோ வைரஸை முழுவதுமாகத் தடுத்து நிறுத்துவதற்கான பணியை 1988ம் ஆண்டில் உலக சுகாதார மையம் தொடங்கியது. இதன் மூலம் போலியோ நோயிலிருந்து பாதுகாக்க அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

போலியோ வைரஸ் என்பது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகளவில் பொதுவாக பாதிக்கிறது. குறிப்பாக, இந்த வைரஸானது முதலில் முதுகுத்தண்டின் நரம்புகளை பாதிக்கிறது. இதனால் பக்கவாதம் அல்லது மரணம் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இது காற்று மூலமாக பரவக்கூடிய ஒரு நோய்த்தொற்றாகும்.

போலியோ வைரஸின் அறிகுறிகள் என்னென்ன?

* போலியோ வைரஸ் முதலில் தொண்டையையும் பின்னர் குடலையும் பாதிக்கிறது. இதன் காரணமாக, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

* பிறகு, மூளை மற்றும் முதுகுத்தண்டுவடத்தை இந்தத் தொற்று பாதிக்கும்.

* தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, கழுத்து மற்றும் முதுகு வலி, தசை வலி, கால்கள் அல்லது கைகளை நகர்த்துவதில் சிரமம் போன்றவை போலியோ பாதிப்பின் அறிகுறிகளாகும்.

* மிக முக்கியமாக இந்த தொற்றும் கிட்டத்தட்ட கொரோனாவைப் போலவே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது.

போலியோ வைரஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

* கழிப்பறைக்குச் சென்ற பிறகு கைகளை சரியாகக் கழுவாமல் இருப்பது,

* சுகாதாரமற்ற நீரைக் அருந்துவது,

* சுகாதாரமற்ற நீரில் உணவை சமைத்து உட்கொள்வது,

* அழுக்கு நீரில் நீந்துவது,

* நோய் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு.

இவை மட்டுமின்றி, இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்துகூட காற்றின் மூலமாகப் பரவும்.

போலியோ சொட்டு மருந்து அவசியமா?

உலக நாடுகளில் இன்னும்கூட ஒருசில நாடுகளில் போலியோ வைரஸின் தாக்கம் இருந்துகொண்டேதான் இருக்கின்றது. அதற்கான முக்கியக் காரணமே முறையான மருத்துவ பாதுகாப்பும் விழிப்புணர்வும் இல்லாததுதான்.

போலியோவை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிதான். இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி தொடர்ந்து இப்பணியையும் போலியோ வைரஸ் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் சரிவர மேற்கொண்டு வருவதால் போலியோ முற்றிலுமாக தற்போது இந்தியாவில் ஒழிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு முதல் போலியோ வைரஸ் பாதிக்காத நாடாக இந்தியா உள்ளது.

சொட்டு மருந்தினால் வைரஸ் முழுவதுமாக அழியுமா?

சொட்டு மருந்தினால் இந்த போலியோ வைரஸை முற்றிலும் அழிக்க முடியாது என்றாலும்கூட, அதை செயலிழக்கச் செய்து கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் இந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து உதவும். இதனால் அதனுடைய நோய் பரவும் தாக்கமானது குறையும் வாய்ப்பு உண்டு. இதை சரியாக எடுத்துக் கொள்வதன் மூலம் போலியோ பாதிப்பிலிருந்து எளிதாக தப்பிக்கலாம்.

யாருக்காக இந்த போலியோ சொட்டு மருந்து?

ஒவ்வொரு வருடமும் முகாம்கள் அமைத்து இலவசமாக போலியோ சொட்டு மருந்தை அரசாங்கமே அளிக்கிறது. இது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே பெற்றோர்களே, போலியோ வைரஸின் ஆபத்தை நன்குணர்ந்து விழிப்புணர்வோடு உங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கத் தவறாதீர்கள்.

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT