அத்தி பல்வேறு வகையான மருத்துவப் பயன்களை கொண்டது என்றாலும், பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாட்டை போக்குவதில் பெரும் பங்களிக்கிறது. அதனைப் பற்றிய சில குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.
சற்று நீண்ட இலைகளையும் பால் போன்ற சாற்றினையும் உடைய பெரும் மரம் அத்தி. பூங்கொத்து வெளிப்படையாய் தெரியாது. அடிமரத்திலேயே கொத்துக் கொத்தாய் காய்க்கும் இயல்புடையது. தமிழகமெங்கும் காடுகளிலும், தோட்டங்களிலும் இவை தானே வளர்பவை. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவ குணமுடையவை. இதில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம். ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன.
அத்தியை பச்சையாக சாப்பிட்டாலும், உலர வைத்து சாப்பிட்டாலும், ஜூஸாக அருந்தினாலும் சத்து குறையாமல் கிடைக்கும். உலர்ந்த அத்தியை சிறு துண்டங்கள் ஆக்கி பாலில் அடித்து குடித்தால் இரும்பு சத்து கிடைக்கும். மிகச் சிறந்த மலமிளக்கியாகவும் இது செயல்படும். இதயத்திற்கு பலத்தைத் தரும். பால் பிடிக்காதவர்கள் தண்ணீரிலும் அடித்து குடிக்கலாம். இதனால் சத்து குறைவுபடாது.
அத்தி பிஞ்சை சமைத்து சாப்பிட்டு வர, வயிற்றுக் கடுப்பு, மூல பிரச்னைகள் குணமாகும். முதிராத நடுத்தரமான காய்களை சமைத்து சாப்பிட்டு வர, மலச்சிக்கல் அகலும். நீர்க்கடுப்பு, உடம்பு வலி ஆகியவை தீரும். அத்தி பாலுடன் வெண்ணெய், சர்க்கரை, கலந்து சாப்பிட்டு வர நீரிழிவு, பெரும்பாடு, நரம்புப் பிடிப்பு, இரத்தம் கலந்த சிறுநீர், பித்தம் ஆகியவை தீரும். அத்தி பாலை மூட்டு வலிகளுக்கு பற்று போட விரைவில் குணமாகும்.
அத்தி பட்டையை தூளாக்கி அதனுடன் மோர் விட்டு அடித்து வடிகட்டிய சாற்றை காலை, மாலை சாப்பிட்டு வர பெரும்பாடு அகலும். அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளை ஒன்று இரண்டாய் இடித்து நீரில் இட்டு நன்கு காய்ச்சி பாதியாய் சுண்டியவுடன் காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வர பெரும்பாடு தீரும்.