Sjogren's Syndrome 
ஆரோக்கியம்

Sjogren's Syndrome - உமிழ்நீர் சுரக்காது; கண்ணீர் வராது!

மதுவந்தி

Sjogren's Syndrome (SHOW-grins syndrome) ஒரு வகை ஆட்டோ இம்யூன் நோய் ஆகும். இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் உடலின் மேலே இருக்கும் சருமத்தின் ஈரப்பதத்தினை உற்பத்தி செய்யும் சுரப்பிகளைத் தாக்கி அதனை அழித்து விடுகிறது. இதனால் கண்ணீர் மற்றும் உமிழ் நீர்ச் சுரப்பது அசாதாரணமான அளவிற்குக் குறைந்து போகிறது. இதுவே இந்த நோயின் ஆரம்ப அறிகுறி. நாவில் சுரக்கும் உமிழ் நீர் வறண்டு, காய்ந்து போகும், அதே போலக் கண்ணீர் சுரப்பதும் குறைந்து கண்ணீர் வராமல் போகிறது.   

இந்த நோய் ஸ்வீடன் நாட்டு மருத்துவர் Henrik Sjögren அவர்களால் 1933 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. எந்த வயதினரையும் தாக்கும். ஆனால் பெரும்பாலும் நாற்பது வயதினை கடந்தவர்களையே பாதிக்கிறது, அதிலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாக இருக்கின்றனர்.

இது எதனால் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை இன்று வரை. இதற்கு ஒரு காரணமாக மரபு வழி மாற்றம் சொல்லப்படுகிறது. பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளின் தாக்குதலால் ஏற்படும் தொற்று கூட இந்த நோயினை தூண்டுவதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.

இதற்கு மருந்தோ அல்லது வேறு சிகிச்சை முறையோ இல்லை. இதனை ஏற்படும் அறிகுறிகளைக் கட்டுப்படுவதன் மூலமே கட்டுக்குள் வைக்க முடியும்.

இதன் அறிகுறிகள்:

  • உலர்ந்த வாய்

  • கண்களில் கண்ணீர் வருவது இல்லை அல்லது குறைவு

  • உலர்ந்த சருமம்

  • உலர்ந்த பெண் பிறப்புறுப்பு 

  • உலர்ந்த தொண்டை (அடிக்கடி இருமல் வருவது)

  • உலர்ந்த மூக்கு (அதனுடன் ரத்த கசிவு அடிக்கடி ஏற்படுதல்)

இந்த நோயின் தீவிரம் இதனுடன் வரும் பிற நோய்களின் தாக்கமாகும். உதாரணத்திற்கு உடலின் பிற உறுப்புக்கள் பாதிக்கின்றன, சிறுநீரகம், கல்லீரல், மூளை, நரம்பு மண்டலம், தண்டுவடம், நுரையீரல் முதலியவை பாதிக்கின்றன. இதன் இன்னொரு பெரிய துணை நோய் முடக்கு வாதம். இப்படிப் பிற நோய்கள் தாக்கும்பொழுது தான் இவர்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்படுகின்றது. துணை நோயின் தீவிரத்தைப் பொறுத்து அவர்களுக்கான சிகிச்சை முறை மாறுபடும்.

இந்த நோயினை குணப்படுத்த முடியாது, ஆனால் சில சிகிச்சை முறையினால் நோயினை கட்டுக்குள் வைக்க முடியும். உதாரணத்திற்குக் கண்கள் உலர்ந்து போகாமல் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் கண் மருந்தினை பயன்படுத்தலாம், உமிழ்நீர் சுரக்க உதவும் சப்ளிமெண்ட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் இது அனைத்தும் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் பயன்படுத்த வேண்டும். 

இப்படி மருத்துவர் பரிந்துரைத்த வழிமுறைகளை வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டவர் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் நோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும், அதனைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுக்கத் துவங்கியதும், அது அவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் நோய் தாக்கம் குறையும். அவர்களால் சகஜமாக வாழ முடியும்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT