

சில நேரங்களில் வெளியூர் செல்லும்போது அல்லது வெளியே சென்று சாப்பிடும்போது சாலை ஓரங்களில் இருக்கும் கையேந்தி பவனில் இருக்கும் ரெசிபிகள் வீட்டில் செய்வதைவிட மிக அருமையான ருசியாக இருப்பதை பார்த்திருப்போம். அதிலும் கோதுமை அடை போன்றவைகள் சில இடங்களில் வெகு பிரசித்தம்.
சரி, நாம் எப்படி செய்தாலும் இந்த கோதுமை அடை சரியாக வரவில்லையே என்று நினைப்பவர்களுக்கு வித்தியாசமான சுவையில் கோதுமை அடை மற்றும் அதற்கு ஏற்ற ஜோடியான காரசாரமான வெங்காய சட்னியும் ரெசிபிகளாக இங்கே…
தேவை:
கோதுமை மாவு - 11/2 கப்
மோர்- 11/2 கப்
உப்பு -1 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி- 1அங்குலம்
பச்சை மிளகாய்- 3
வெங்காயம்- 2
தக்காளி-1
வறுத்த ரவை- 1/4 கப்
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
தேங்காய்த்துருவல்- 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை- சிறிது
நெய் அல்லது வெண்ணெய் அல்லது எண்ணெய்- தேவைக்கு
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் சலித்த கோதுமைமாவு, மோர், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இது அதிக கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் மிதமான பதத்தில் கரைத்துக் கொள்ளவும். சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து இந்த மாவில் கலந்து கொள்ளவும். மோர் இல்லையெனில் இதில் கெட்டியான தயிரை முக்கால் கப் மோர் போல கடைந்து சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் தேவையான பச்சை மிளகாய்- மற்றும் வரமிளகாய்களை சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கி அதனுடன் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும். இவை ஓரளவு மிதமாக வதங்கினால் போதும். இதில் தேவைப்பட்டால் முருங்கைக்கீரை சிறிது, தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து மாவில் நன்கு கலந்துவிடவும்.
இப்போது அடுப்பில் ஒரு தவாவை வைத்து மிதமான தீயில் அடை போன்ற தோசைகளை ஊற்றி நெய் அல்லது வெண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும். மொறுமொறுப்பாக இது சூப்பர் சுவையுடன் இருக்கும். முருங்கைக்கீரை மற்றும் தேங்காய் துருவல் உங்கள் சாய்ஸ் மட்டுமே. சேர்த்தால் நன்றாக இருக்கும்.
வெங்காய சட்னி செய்முறை
தேவை:
எண்ணெய் - 1 ஸ்பூன்
வரமிளகாய் - பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்ப
புளி - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை அல்லது புதினா - ஒரு கைப்பிடி
பூண்டு - 5 பல்
வெங்காயம்- 3 வெங்காயம்
உப்பு- தேவைக்கு
செய்முறை:
சூடான எண்ணெயில் மிளகாய்கள், பூண்டு, வெங்காயம் போட்டு நன்கு வதக்கி இறுதியாக மல்லித்தழையை போட்டு இறக்கி விடவும். இதில் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நீர் இல்லாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து பின் தேவையான நீர் சேர்த்துக்கொள்ளவும். இதற்கு தாளிப்பாக கரண்டியில் எண்ணெயில் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டலாம். தேவையான அளவு காரத்தை அவரவர் தேவைக்கு ஏற்ப மிளகாய்களை சேர்த்துக்கொள்ளுங்கள் கோதுமை அடைக்கு மழைக்கேற்ற சூப்பரான ஜோடி இது.