

இந்தக் கட்டுரை, அதிகாலை எழும் பழக்கத்தை உடல் கடிகாரத்துடன் ஒத்திசைக்க 1 முதல் 7 நாட்கள் வரை படிப்படியான மாற்றங்கள் அவசியம் என கூறுகிறது. முதல் நாட்களில் சோர்வு, பகல் தூக்கம் இயல்பாக இருக்கும் நிலையில், குறுகிய குட்டி தூக்கம், சீக்கிரம் இரவு உணவு, 7-8 மணி நேர முழு தூக்கம், காலைக்கான தெளிவான இலக்கு போன்றவை மூலம் எட்டாவது நாளில் இயற்கையாகவே 4 மணிக்கு எழ முடியும் என விளக்குகிறது.
அதிகாலை பழக்கம் 4 அல்லது 5 மணிக்கு எழுவது என்பது நம் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு சிறந்த பழக்கமாகும். ஆனால் இதனை ஒரே நாளில் செய்ய முயன்றால் உடல் சோர்வடைந்து பாதியிலேயே கைவிடத் தோன்றும்.
அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு எழுவது என்பது நம் உடல் நலத்தையும் மன அமைதியையும் மேம்படுத்தும். ஆனால் அதற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம்.
பழைய நேரத்தை மாற்றுவதும் மாலை நேர காஃபினைத் தவிர்ப்பதும்:
தினமும் தூங்கும் நேரத்தை 15 அல்லது 30 நிமிடங்கள் முன்கூட்டியே மாற்றிக்கொள்வது சிறந்த பலனளிக்கும். அத்துடன் மதியத்திற்கு பிறகு காபி அல்லது டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இவை நம் உடலில் பல மணி நேரம் தங்கி தூக்கத்தை தள்ளிப்போடும். எனவே இவற்றை தவிர்த்துவிடுவது நல்லது.
அலாரத்தை தொலைவில் வைக்கவும்:
அலாரத்தை நம் படுக்கைக்கு அருகில் வைக்காமல், எழுந்து நடந்து சென்று அணைக்கும் தூரத்தில் வைக்கவும். இது நாம் மீண்டும் snooze செய்து தூங்குவதைத் தடுக்கும். அலாரம் கடிகாரத்தை அல்லது செல்போனை படுக்கையில் இருந்து தூரமாக வைப்பது நல்ல பலன் அளிக்கும். காரணம் இதனை அணைப்பதற்காக நாம் கட்டாயம் எழுந்து நடக்கவேண்டும்.
அந்த நேரத்தில் நம் தூக்கம் கலையலாம். முக்கியமாக திடுக்கிட்டு எழும் பயங்கரமான சத்தங்களுக்கு பதிலாக, மென்மையான இசை அல்லது இயற்கையான ஒலிகளை அலாரமாக வைப்பது காலைப் பொழுதை நிம்மதியாகத் தொடங்க உதவும்.
எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கவும்:
காலையில் எழுந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது . இது நம் உடலை சுறுசுறுப்பாக்கி தூக்கக் கலக்கத்தை உடனடியாக விரட்டிவிடும்.
திரை நேரத்தை தவிர்க்கலாம்:
இரவில் மொபைல் போனை அதிக நேரம் பார்க்காதீர்கள். தூங்குவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே லேப்டாப், தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதை அல்லது பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இவற்றில் இருந்து வரும் நீல ஒளி, தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன் சுரப்பை தடுக்கும்.
வெளிச்சத்திற்கு செல்லுங்கள்:
அலாரம் அடித்து எழுந்ததும் முதல் வேலையாக ஜன்னலைத் திறந்து பிரகாசமான வெளிச்சத்தை பார்ப்பது நம் உடலில் உயிரியல் கடிகாரத்தை சீரமைக்கும். எனவே எழுந்த உடனே ஜன்னலைத் திறந்து வெளிச்சத்தை உள்ளே அனுமதிப்பது நல்லது. இது நம் மூளைக்கு விழிப்புணர்வைத்தரும்.
காலையில் ஒரு இலக்கு வையுங்கள்:
காலையில் எழுந்தவுடன் என்ன செய்யவேண்டும் என்ற திட்டத்தை இரவே முடிவு செய்யுங்கள். ஒரு தெளிவான காரணம் இருந்தால் மட்டுமே நம்மால் தொடர்ந்து எழ முடியும். எழுந்தவுடன் புத்தகம் படிப்பது, நடைப்பயிற்சி செய்வது அல்லது தியானம் போன்ற நமக்குப் பிடித்த சுவாரஸ்யமான வேலையை திட்டமிடுவது அதிகாலையில் எழுவதற்கு நம்மை ஊக்குவிக்கும்.
சரியான நேரத்தில் உணவு:
இரவு உணவை தூங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பே எளிதாக எடுத்துக்கொள்வது விரைவில் தூக்கம் வர உதவும். எனவே இரவு உணவை சீக்கிரமே முடித்துக்கொள்வது நல்லது. தாமதமாக சாப்பிடுவது செரிமானத்தை பாதித்து தூக்கத்தைக் கெடுக்கும். எனவே இரவு உணவை சீக்கிரமே முடித்துக் கொண்டால் காலையில் புத்துணர்ச்சியுடன் எழ முடியும்.
முதல் வாரம் எப்படி இருக்கும்?
முதல் வாரமே நேரடியாக 4 மணிக்கு அலாரம் வைத்தால் உடல் ஒத்துழைக்காது. படிப்படியான மாற்றமே வெற்றியைத் தரும். வழக்கமாக காலை 6 மணிக்கு எழுந்து கொள்பவர் என்றால், இரண்டு நாட்கள் ஐந்தே முக்கால் மணிக்கு அலாரம் வைக்கலாம்.
அதேபோல் இரவு 15 நிமிடங்கள் முன்பாகவே தூங்கச்செல்லலாம். அதற்கு அடுத்த நாள் தூக்க நேரத்தை மேலும் குறைத்து ஐந்தரை மணிக்கு ஏழ முயற்சி செய்யலாம். பகலில் சோர்வாக இருந்தால் ஒரு 20 நிமிடங்கள் குட்டி தூக்கம் போடலாம். இப்படி நேரத்தை குறைத்துக்கொண்டே வர நம் இலக்கான 4/5 மணிக்கு எழப் பழகிவிடுவோம்.
உடல் பழகும் வரை முதல் வாரம் மிகவும் சவாலாக இருக்கும். எனவே உடலை வற்புறுத்தாமல் மெதுவாக மாற்றவேண்டும்.
1 முதல் 3 நாட்கள் வரை:
உடல் சோர்வாகவும், பகலில் தூக்கம் வருவதும் இயல்பு தான். நம் உடல் புதிய பழக்கத்திற்கு பழகும் வரை சிறிது போராட வேண்டியிருக்கும். மனஉறுதியுடன் அலாரம் அடித்தவுடன் எழுந்து விடுவது சிறப்பு.
4 மற்றும் 5 நாட்கள்:
உடல் சற்று ஒத்துழைக்கத் தொடங்கும். அதிகாலை நேரத்து அமைதி நம் மனதுக்கு பிடிக்க ஆரம்பிக்கும்.
6 மற்றும் 7 நாட்கள்:
உடல் கடிகாரம் அந்த நேரத்திற்கு இப்பொழுது நன்கு பழகிவிடும். அலாரம் இல்லாமலேயே தானாகவே விழிக்கத் தோன்றும்.
ஆரோக்கியமான உடலுக்கு ஏழு முதல் எட்டு மணி நேரத்தூக்கம் மிகவும் அவசியம். எனவே நான்கு மணிக்கு எழ வேண்டுமானால் இரவு 9 முதல் 10 மணிக்குள் படுக்கைக்கு சென்று விடவேண்டும். எனவே இரவு சீக்கிரம் தூங்கச் செல்வது அவசியம். முதல் ஏழு நாட்கள் கடினமாக இருக்கும். எட்டாவது நாளில் இருந்து நம் உடல் இயற்கையாகவே அந்த நேரத்திற்கு விழித்துக் கொள்ளப் பழகிவிடும்.
இதையும் படிங்க:
நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா? இந்த ரகசியங்களை உடனே தெரிஞ்சுக்கோங்க!
டென்ஷன், மன அழுத்தத்திற்கு குட்பை: வாழ்க்கையை மாற்றும் 4 எழுத்து மந்திரம்!
கறுத்த வெள்ளிப் பாத்திரங்களை நொடியில் மிளிர வைக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள்!