

அற்புதமான நூலான திருக்குறளில் வள்ளுவர் மனிதனைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்து அவன் நீடித்து எப்படி வாழ முடியும் என்ற ரகசியத்தையும் கூறுகிறார்.
முதலில் கை, கால், கண் உள்ளிட்ட அவயவங்களுடன் உயிரோடு நடமாடிக் கொண்டிருந்தாலும் அவன் பிறருக்குச் சேவை செய்தாலே அவனை உயிரோடிக்கும் மனிதன் என்று கூற வேண்டும் என்று கூறுகிறார்.
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும் (குறள் எண் 214)
பிறருக்கு நன்மை செய்பவனே உயிர் வாழ்பவன். மற்றவர்கள் (உயிரோடு நடமாடினாலும் கூட) அவர்கள் செத்தவருடனேயே சேர்க்கப்படுவர்.
அடுத்து ஒரு விதமான பழியும் இல்லாமல் புகழுடன் வாழ்பவரே வாழ்பவர்கள் என்று தனது அடுத்த இலக்கணத்தைக் கூறுகிறார்.
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழா தவர் (குறள் எண் 240)
அறநூல்கள் அனைத்தையும் இதனுள் அடக்கி விட்ட வள்ளுவர் இசை பட வாழ்; வசையுடன் வாழ்ந்தால் நீ வாழாதவனே என்கிறார்.
அடுத்து மனிதருள் சிறந்த வாழ்க்கையை வாழ்பவர் யார் என்பதற்கு இலக்கணம் கூறுகிறார்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் (குறள் எண் 1033)
உழவர் பெருமக்களால் அல்லவா உலகம் உணவைப் பெறுகிறது. ஆகவே யார் உழுது பிறர்க்கும் தமக்கும் உணவைத் தர உழுவதை மேற்கொள்கிறாரோ அவரே வாழ்வார், மற்றவர் அவர் பின்னால் சென்று அவர் கொடுப்பதை வாங்கிச் செல்பவரே என்கிறார் வள்ளுவர்.
அடுத்து இல்வாழ்வான் என்று குடும்பஸ்தனைச் சுட்டிக் காட்டி அவனுக்கும் இலக்கணம் கூறுகிறார் வள்ளுவர்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (குறள் எண் 41)
இல்லறத்தை நடத்தும் ஒருவன் பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், துறவி ஆகிய மூவருக்கும் நிலை பெற்ற துணையாக இருத்தல் வேண்டும் என்பது வள்ளுவரின் கட்டளை.
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (குறள் எண் 42)
அது மட்டுமல்ல, துறந்த துறவிகளுக்கு உணவு படைத்தல் வேண்டும். வறுமையாளர்க்கு உணவு வழங்கல் வேண்டும். இறந்தோருக்கு திதி என்னும் நீர்க்கடன் உள்ளிட்டவற்றைத் தவறாது செய்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
அடுத்து,
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலான்
பெண்மை நயவாதவன் (குறள் எண் 147) என்று கூறுகிறார்.
அறத்தோடு கூடி வாழும் ஒருவன் இன்னொருவனின் மனைவியிடம் பெண் இன்பத்தை விரும்பாதவன் என்று கூறி இராமாயணத்தின் மையக் கருத்தை முன் வைக்கிறார்.
சரி, மனிதனாய்ப் பிறந்தவன் நீடித்து வாழ என்ன செய்ய வேண்டும்.
அதற்கும் வழி கூறுகிறார் வள்ளுவர்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
நிலமிசை நீடு வாழ வேண்டுமா? அன்புடன் நினைப்பவரது உள்ளக் கமலத்தில் இருப்பவனின் பெருமை பொருந்திய பாதங்களை அடைந்தார் நிலமிசை நீடு வாழ்வார். (குறள் எண் 3)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் (குறள் எண் 6)
மெய், கண், மூக்கு, வாய், செவி என்ற ஐந்து புல்கன்களின் வழியாக வரும் ஆசையை அறுத்து பொய்யே இல்லாத ஒழுக்க நெறியில் யார் வாழ்கிறாரோ அவர் நிலத்தின் கண் நீடு வாழ்வார் என்பது வள்ளுவர் கூறும் உறுதி!
மனிதனில் உயிருடன் இருந்தாலும் இறந்தவர் யார், எப்படி வாழ வேண்டும், மனிதரில் சிறந்தவர் யார், இல்வாழ்வானின் நெறி என்ன, ஒருவன் நீடு வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை அறுபது வார்த்தைகளுக்குள்ளேயே அடக்கிக் கூறும் வள்ளுவரைப் பிரமிப்புடன் போற்றத்தானே வேண்டும்!