

2076ஆம் ஆண்டு. கணினி யுகத்தில் ஒரு புரட்சி என்றே சொல்லலாம். பயோ சிப்கள் வந்து மூளைக்குள் பொருத்தப்பட்டு வருகின்றன. இனி படித்தவர், படிக்காதவர், கணக்கில் புலி என்ற சித்தாந்தங்கள் இல்லை. சிப் உள்ளதோ அதன் மெமெரிக்குத் தக்க ஐ க்யூ அவருக்கு.
போனுக்குள் மெமரி கார்டு செருகுகிற மாதிரி. அதற்கான செருகும் துளைகள் ஆகிய போர்ட்களும் எக்ஸ்ட்ராவாக கழுத்தில் வைத்துவிட்டார்கள். வேண்டும் அளவுக்கு சிப்கள் பொருத்திக்கொள்ளலாம்.
ஒரு மனித மூளையின் மெமரித் திறன் அதிகபட்சமாக 2500 டிபி என்று அளவிடப்பட்டு இருந்தது. 30 லட்சம் மணி நேர சினிமா அதில் சேமிக்கமுடியும். இந்த பயோ சிப்களைப் பொருத்தியதும் அதன் சேமிப்புத்திறன் அளவிடமுடியாத அளவு கூடுதல் மெமரி உடையதாக மாறிவிட்டது.
உலகில் உள்ள மொத்த புத்தகங்கள், சினிமாக்கள் எல்லாவற்றையும் அதில் நிரப்பமுடியும். ஆனால், அத்தனை டேட்டா இருந்தால் தூக்கம் போய்விடும் என்பதால் அந்த பயோசிப்பை வேண்டும் சமயத்தில் மட்டும் செயல்படுத்த ஒரு ஸ்விட்ச் நெற்றிப் பொட்டில் வைத்து இருந்தார்கள்..
தொட்டால் இயங்கும்.. மறுபடி தொட்டால் செயல்படாது. பரீட்சார்த்த முறையில் இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானி கதிரேசன் தன் மூளையுடன் இணைப்பைப் பொருத்திக்கொண்டார்.
நன்றாகவே வேலை செய்தது. கூகுள் போகாமல் அவரால் எல்லாவற்றுக்கும் பதில் அறிய முடிந்தது. இதை ஒரு சைபர் மாநாட்டில் டெமோ பண்ணிக் காட்ட உலகமே வியந்தது. பத்திரிகைகள், மீடியா எல்லாவற்றிலும் கதிரேசன்... கதிரேசன்... கதிரேசன்...
ஒரு சிறிய மாடல் சிப் புரோகிராமை எல்லோரும் அறிந்துகொள்ள வெளியிட்டார். பயோ சிப் புரோட்டீன் மூலக்கூறுகளால் ஆனது. உடலில் எங்கும் ஒட்டிக்கொள்ளும். உடலின் எதிர்ப்பு இம்யூன் அமைப்பு எதிர்ப்பைக் காட்டாது.
சைனாக்காரர்கள் சும்மா இருப்பார்களா… அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்து நாய், பூனை, ஆடு மாடுகளுக்கும் பொருத்திவிட்டார்கள்.
ஒரு சர்வர் மூலம் அந்த விலங்குகளின் சிப் கார்டுகள் இணைக்கப்பட்டு கணினி வழியே உத்தரவுகள் பிறப்பித்தார்கள். அவையும் கீழ்ப்படிந்தன. கால்நடை மேய்ச்சலுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. அவற்றின் உடல் எடை, ஆரோக்கியம் எல்லாவற்றையும் கண்காணிக்க ஏஐ உதவியது.
இருந்தாலும் மனித மூளைக்குள் வைக்கும் சிப் பற்றிய விவரங்களை கதிரேசன் ரகசியமாகவே வைத்திருந்தார்.
எல்லாம் நார்மலாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
தினசரி அவர் லேப் மற்றும் வீட்டுக்கு பல விஞ்ஞானிகள் வந்து பாராட்டி கருத்துகளைச் சொல்லிச் சென்றார்கள். அவரின் கண்டுபிடிப்பின் தீவிரத்தை அறிந்த அரசு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. வாசலில் இரு கமாண்டோக்கள் காவல் எப்போதும்.
கதிரேசன் ஒரு நாள் வித்தியாசமாக ஒரு உணர்வை அறிந்தார்.
தன் உடல் தன் வசம் இல்லை என்கிற மாதிரி இருந்தது. யாரோ எங்கிருந்தோ தன்னை ஆட்டுவிப்பதுபோல உணர்ந்தார். இது என்ன பிரமையா.. இல்லை கனவா.. இல்லை ஹலுசினேஷன் எனப்படும் செயற்கை காட்சிகளா... அவரை அறியாமலே அவர் கைகள் சில வேலைகளை செய்தன.
ஒரு நாள் ஒரு கூரியர் டெலிவரி மேன் ஒரு பார்சலைத் தந்துவிட்டுப் போனான். பார்சலுக்குள் சில மெமரி கார்டுகள். ஒவ்வொன்றும் 1000 டெரா பைட்ஸ் மெமரி உள்ளவை. அந்தப் பிரமை நிலை திடீரென வந்தது.
அவர் நினைக்காமலே கைகள் தானாக அவர் தலையில் செருகி இருந்த பயோசிப்களைக் கழற்றின. புதிதாக கூரியரில் வந்த கார்டுகளை செருகிக்கொண்டார்.
கழற்றிய சிப்களை ஒரு டப்பாவுக்குள் கவரில் வைத்து அடைத்தார். அப்போது காலிங் பெல் அடிக்க ஒரு கூரியர் மேன் நின்றான். கமேண்டோக்கள் சோதித்தார்கள் அவனை.
அவர் அவனிடம் தன் தலையில் இருந்து கழற்றிய பயோ சிப்கள் அடங்கிய ஒரு பெட்டி பார்சலைத் தந்தவுடன் அவன் போய்விட்டான்.
அவர் மனசுக்குள் ஒரு மூலையில் ஏன் இப்படிச் செய்கிறாய்...? யார் உன்னை அப்படிச் செய்யச் சொல்கிறார்கள்...? என கேள்விகள் எழுந்தபடி இருந்தன.
ஆனாலும் அவரை ஆட்டுவித்த உணர்வு சொன்னதே மேலோங்கியது.
“எழுபத்து ஐந்தாவது மாடிக்குப் போ.”
லிஃப்ட்டில் போனார். எழுபத்தி ஐந்தாவது மாடியுடன் லிஃப்ட் முடிவடைந்தது.
“மொட்டை மாடிக்குப் போ.”
படியேறி அடைந்தார். ப்ரொபொஸர் அவசரமாக மாடிக்கு விரைவதைப் பார்த்த கமாண்டோக்கள் அவரைப் பின் தொடர்ந்து போனார்கள். பக்கத்தில் இருந்த இன்னொரு லிஃப்ட் மூலம்.
“கைப்பிடிச் சுவரின் மேல் ஏறு”
மெல்ல ஏறினார்.. காற்று பலமாக் வீசியது
“குதி”
குதித்தார்.
கதிரேசன் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் பயோ சிப் விஞ்ஞானிகளிடம் சொன்னார்:
“இவராக குதிக்கவில்லை. மன நிலை சரியில்லாமல் இருந்திருப்பார் போலிருக்கு.. சிசிடிவி காட்சிகளில் இவர் அங்குமிங்கும் அலைக்கழிப்பது பார்க்க ஏதோ பில்லி சூனியம் பேய் ஆட்டுவித்த மாதிரி இருக்கு.
அவர் புதிதாகச் செருகிக் கொண்ட மெமரி கார்டுகளில் சில கட்டளைகள் மட்டுமே பதிவாகி இருந்தன. 75 வது மாடிக்குப் போ.. படி மூலம் மொட்டை மாடிக்குப் போ.. கைப்பிடி சுவரில் ஏறு.. குதி.
சீனியர் விஞ்ஞானிகளுக்கு எதுவும் பிடிபடவில்லை.
யார் கட்டளைகளுக்கு அவர் கீழ்ப்படிந்தார்?
புதிதாக அப்போது ஐஐடியில் பிஹெச்டி படித்து முடித்து ஆராய்ச்சிக் குழுவில் இணைந்த கணேஷ் மெல்லிய குரலில்
“சார் எனக்கு ஒன்று தோன்றுகிறது.”
சீஃப் அவனைப்பார்த்து, “சொல்லு பயப்படாமல்...”
“சார் கதிரேசன் சார் மூளைக்குள் இருந்த பயோ சிப்களை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள்.”
அனைவரும் திடுக்கிட்டார்கள்.
“உண்மை... அவர் லேப் டாப் மூலம் பயோ சிப் நிர்வாகத்துக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கார்.. அதில் தன் மன நிலை மாற்றங்களுக்கு என்ன காரணம் தெரியவில்லை என்று கேட்டு எழுதி இருந்தார்.." என்றார் எஞ்சியிருந்த ஒரு ஸ்டாண்ட் பை (அவசர கால உதவி சிப்) ரிசர்வ் சிப்பை ஆராய்ந்த ஒரு விஞ்ஞானி!