

அது நான் ஓய்வு பெற்ற சமயம். நான் அன்று குடியிருந்த வீட்டின் பின்புறம் இருந்த ஒரு வேப்ப மரத்தின் கீழே நாற்காலியில் அமர்ந்து ந்யூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று 'கொக்கரக்கோ..' என்ற சேவலின் கூவல் என்னை திரும்பி பார்க்க செய்தது. அங்கே, காம்பவுண்ட் சுவரின் மேல் நின்று கொண்டிருந்தான் ஒரு குள்ள சேவல். குள்ளம் தானே தவிர ரொம்பவும் குறு குறு என்றிருப்பான். அவனுடைய இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெட்டை கோழிகள்.
நான் இருப்பதை பொருட்படுத்தாமல் மூன்றும் தரையில் குதித்து அங்கு பரவியிருந்த இலைகளை கிளற ஆரம்பித்ததன.. சேவல்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இத்தனை குள்ள பட்டா சேவலை பார்த்ததில்லை. ஆள் தான் குள்ளமே தவிர அதிகார தோரணையில் குறைச்சல் இல்லை.
அவனை விட சைசில் பெரிய அவனது பொண்டாட்டி கோழிகள் அவன் கட்டளைகளுக்கு பவ்யமாய் பணிந்து நடந்து கொண்டன. எனது ஒரு சிறு வயது அனுபவத்திலிருந்து சேவல் என்றாலே எனக்கு ஒரு வித பயம். ஆயினும் இந்த குள்ளன் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது.
நாங்கள் இருந்த பகுதி மேல் தட்டு மக்கள் வசிக்கும் பகுதி. அங்கு யாரும் வீட்டில் கோழி வளர்ப்பவர்கள் இல்லை. எங்கிருந்து வந்தான் இவன் என்று எனக்கு புரியவில்லை. தினமும் ஒரு பிடி அரிசியும் கோதுமையும் அவன் முன் வைக்க ஆரம்பித்தேன். முதலில் என்னை சந்தேகத்துடன் பார்த்தான். தன்னிடமிருந்து தன் பெட்டைகளை பறிக்க நினைக்கிறான் என்று நினைத்தான் போலும். ஆனால், இந்த சந்தேகம் இரண்டு நாளே நீடித்தது. பின்பு இறங்கி வந்து சாப்பிட ஆரம்பித்தான்.
பெட்டைகளையும் அனுமதித்தான். அவர்களிடம் ஒரே ஒரு குறை தான் அவர்களுக்கு குஞ்சுகள் இல்லை.. ஓரிரு வாரங்களில் பயம் தெளிந்து என் கைகளிலிருந்து அரிசியை கொத்தி தின்ன ஆரம்பித்தன. இப்படி இருக்கையில், திடீரென்று ஒருநாள் அவன் எங்கள் பழக்கடைக்கு வரவில்லை. அவன் பெண்டாட்டிகளும் வரவில்லை. வேலை கார அம்மாவிடம் என்ன சேவலையும் கோழிகளையும் காணவில்லை என்று தயங்கி தயங்கி கேட்டேன். அவர் சொன்னார்..
"அட நீங்க வேற அதுகளை அறுத்துட்டு இருப்பாங்க. அதுக எங்கிருந்து வந்து கொண்டிருந்ததுன்னு தெரியாதா உங்களுக்கு? நம்ம வீட்டு பின்புறம் மெயின் ரோட்டில் புதுசா திறந்த ப்ரோடீன் ஷாப்பிலிருந்தான்."
"ப்ரொடீன்னா?"
"அது கூட தெரியாதா. இப்போ கோழிக்கறி கடைகளை பேஷனா பரோட்டீன் ஷாப்ன்னு தான் சொல்றாங்க."
எனக்கு என்ன தோணியதோ ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு மெயின் ரோட்டில் உள்ள அந்த கடைக்கு போனேன்.. அங்கு நான் கண்ட காட்சி என்னை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. கடையின் சுழலும் ஸீத்ரூ ஓவனில் மூன்று உரித்த கோழிகள் தீப்பற்றி சுழன்று கொண்டிருந்தன.
நடுவில் சிறிதும் அதன் இரண்டு பக்கங்களிலும் பெரியதுமான மூன்று பறவைகள் வெந்து கொண்டிருந்தன.. எனக்கு புரிந்து விட்டது அந்த மூன்றும் எங்கள் தோட்டத்திற்கு வந்து போய்க்கொண்டிருந்த குள்ளனும் அவன் பெண்ஜாதிகளும் தான் என்று.
நான் அவற்றை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் வந்து நின்றார் ஒரு போலீஸ்காரர். "நாக்கில் ஜலம் வரவில்லையா உங்களுக்கு?" என்று கேட்டாரே ஒரு கேள்வி. என் நண்பர்களை இழந்து என் கண்களில் ஜலம் வரும் போல ஆனது. அவருக்கு தெரிய வாய்ப்பில்லை தான். மிருகங்களை பறவைகளை நாம் ஏன் உணவாக மட்டுமே பார்க்க ஏனோ தெரியவில்லை எனக்கு.
இந்தக் கதையை வாசிப்பதன் மூலம், இயற்கையோடும் விலங்குகளோடும் மனிதன் கொள்ளும் ஆழமான பந்தங்களை உணர்ந்து, பிற உயிர்களிடம் கரிசனையோடும் இரக்கத்தோடும் வாழும் புதிய உளவியல் தெளிவை வாசகர்கள் பெறுவார்கள்.