

நண்பர்கள் மூவர் வாக்கிங் போனார்கள்.. ஆசிரியர் (ஓய்வு) குப்புசாமி சொன்னார், “எழுத்தாளர் தேவன் அவர்களிடம் அவர் நண்பர் கேட்டார்.. 'சார் நீங்க ப்யூர் வெஜிடேரியன்னு சொல்றீங்களே.. ஒரு துளி பாலை மைக்ரோஸ்கோப் மூலம் பாருங்கள்.. அதில் எத்தனை சிறு நுண் உயிர்கள் நீந்தும் தெரியுமா. அவை நீங்கள் பாலைக்காய்ச்சும் போது இறந்து விடும். பால் சைவம் இல்லை'
தேவன் சொன்னார்.. 'வாஸ்தவம் நீங்கள் சொல்வது.. ஆனால் பாலைக் கறந்ததும் பசு இறந்து விடுவதில்லையே..”
இது வெஜிடேரியனிசம் பற்றி நல்ல தெளிவைத் தரும்.
கணிதமேதை இராமானுஜம் கப்பலில் லண்டன் போனார் அறிஞர் ஹார்டி அழைப்பின் பேரில்.. கப்பலில் சைவ உணவு கிடைக்காமல் அம்மா தந்த லட்டுகளை மட்டும் சாப்பிட்டு சமாளித்தார்..
ஒரு பழமொழி இருக்கு தெரியுமா.. மாமிச உணவு சாப்பிட்டால் முரட்டுக் காளை மாதிரி உடலில் வலிமை உண்டாகும் என்பர்; ஆனால் அந்த முரட்டுக்காளை தின்பது என்னவோ பச்சைப் புல்”
நண்பர் நாகமுத்து சொன்னார் – “இன்னொரு பழமொழி இருக்கு.. “எனது உணவு வளர்க்கப்பட வேண்டும்… பிறக்க வேண்டாம்……”
பால் மேக் கார்ட்னி என்ற அறிஞர் சொன்னார், “இறைச்சிக் கூடங்களின் சுவர்கள் கண்ணாடியால் ஆகி இருந்தால் பலரும் சைவ உணவுக்காரர்களாகி விடுவார்கள்”
காந்திஜியும் லண்டன் வாழ்க்கையில் ஆரம்பத்தில் சைவ உணவுக்கு அலைந்திருக்கார் அங்கு.
ஒரு முறை பெர்னார்ட்ஷாவிடம் கேட்டார்கள்.. நீங்கள் ஏன் அசைவம் உண்பதில்லை… அவர் “விலங்குகள் என் நண்பர்கள்.. நான் நண்பர்களை உண்பதில்லை..” பெர்னார்ட்ஷா 94 வயது வரை வாழ்ந்தார்.
குப்புசாமி – “லியானார்டோ டாவின்சி பறவைகள் விலங்குகளிடம் மிகுந்த அன்பு கொண்டவர்.. கூண்டுகளில் அடைத்து விற்கும் பறவைகளை வாங்கி சுதந்திரமாய்ப் பறக்க விடுவார்.
காந்திஜி சொன்னார். ஒரு நாட்டில் விலங்குகளை மக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை வைத்தே அந்த நாட்டின் சிறப்பு கண்ணியம் அளக்கப்படுகிறது.
பிதாகோரஸ் என்ற அறிஞர் சொன்னார்… உணவுக்காக விலங்குகளைக் கொல்வது நிற்காதவரை மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் கொல்வது நிற்காது.”
கர்னல் கந்தசாமி பிரெஞ்ச் ஆர்மி ரிடையர்டு சொன்னார் - “அசைவ உணவு மிருகத்தன்மையை மனதில் உருவாக்கும்ன்னு சொல்றாங்க.. ஹிட்லர் சுத்த சைவ உணவுக்காரர் தெரியுமா.. இருந்தும் கொடூர சர்வாதிகாரியா இருந்தார். உணவுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இருக்காதோ..?”
குப்புசாமி – “பிரதமர் மோடி, அப்துல்கலாம், அமிதாப் பச்சன் விராட்கோலி, நடிகர் அமீர்கான், நடிகர் தனுஷ் இவர்களும் சுத்த சைவ உணவுக்காரர்களே.”
கர்னல் கந்தசாமி சொன்னார் – “நீங்க இப்படிச் சொல்றீங்க… நான் வெஜ் சாப்பிடும் சமயத்தைச் சார்ந்த பலர் வளைகுடா நாடுகளில் ப்யூர் வெஜ் ஆக இருப்பவர்கள் இருக்காங்க…
குப்புசாமி - “எம். ஆர். ராதா ஒரு படத்தில் ஒரு நக்கல் வசனம் சொல்வார்.. ஓ.. சாப்பாட்டிலே கூட இருக்காடா உங்க ஜீவ காருண்யம்.. கீரைத்தண்டை வேரோட புடுங்கி திங்கறீங்களே அது என்ன.." என்று
உண்மையில் தாவரங்களுக்கும் நம்மைப் போல உணர்வுகள் உண்டு என்பதை நிரூபிக்க விஞ்ஞானி போஸ் ஒரு சோதனையை நிகழ்த்திக் காண்பித்தார்.
ஒரு தாவரத்தைக் கத்தியால் கீறினால் நம்மைப் போல அலறும்.. ஆனால் அந்த சத்தம் மிகவும் மெல்லியது என்றார் போஸ்.
சிலக் கருவிகள் மூலம் அந்த அலறலை பதிவு செய்து அறியலாம் என காரட், முள்ளங்கி இவற்றின் மீது விஷக் கலவையை ஊற்றினால் அவை அலறும் என சொல்லி சோதனையை ஆரம்பித்தார்.
ஒரு மாணவர் விஷத்துக்குப் பதில் தண்ணீரை மாற்றி வைத்துவிட்டார் சோதனைக் குழாயில். இவர் அதை ஊற்ற ஒன்றும் நிகழவில்லை..
இந்தத் தாவரத்துக்கு இது ஊறு விளைவிக்காததால் இது விஷம் இல்லை என டக்கென்று குடித்து விட்டார்.. மாணவர் வெட்கி விஷயத்தைச் சொல்லி ஒப்புக்கொண்டார் மாற்றியதை.”
நண்பர் நாகமுத்து – “வள்ளுவர் ஒரு அதிகாரமே பாடிவிட்டார் புலால் மறுத்தல் என்று.. ஆனால் ஒரு விஷயம் தெரியுமா.. சைவ ஹோட்டல்கள் நடத்துவதில் லாபம் கிடைக்காது.. பலர் அதை மூடிவிட்டு நான் வெஜ் ரெஸ்டாரண்ட் ஆக மாற்றிவிட்டார்கள்.. பிரியாணி, ஷவர்மா, சிக்கன் 65, லெக்பீஸ், மீன் வறுவல் என்று.”
குப்புசாமி – “வாஸ்தவம் சார்.. அதிக விலைக்கு விற்றால் கூட இட்லி, பொங்கல், வடை, பூரிகிழங்கு ரோஸ்ட் என ஒருத்தர் ஒரு மீடியமான ஹோட்டலில் காலை டிபன் சாப்பிட்ட பில் ரூ. 150 அதிகம்.. ஆனால் அசைவை ஹோட்டல் சாப்பாடு எக்ஸ்டிரா பதார்த்தங்கள் வைத்து ஒரு முழு சாப்பாட்டுக்கு பில் ரூ. 400 முதல் 500 வரை வரும்.
ஒரு வடை ரூ. 10. ஆனால் வறுத்த மீன் துண்டு ரூ. 100. ஆள் சம்பளம், வாடகை, சமையல், சாமான்கள், இஞ்சி, பூண்டு, சோம்பு தேங்காய், மசாலா சாமான்கள் எல்லாம் விலை அதிகம். லாபம் தானே ஹோட்டல் காரர்கள் குறிக்கோள்.. அன்னதானம் இல்லையே.
ஒரு சைவ குருமா வைக்கும் அதே செலவில் ஒரு நான் வெஜ் குருமா வைத்து விடலாம்.. விலை ரூ. 200 வரை பில் ஆகும் சப்பாத்தி புரோட்டாவுடன். முன்பை விட ஞாயிற்றுக் கிழமைகளில் திடீர் மீன் கடைகள் அங்கங்கே முளைத்து விடுகின்றன”
கர்னல் – “ஆப்பிரிக்காவில் சைவம் என்றால் என்ன என்றே தெரியாது. மத்திய ஆப்பிரிக்காவில் கறையான்களை வறுத்துச் சாப்பிடுவார்கள். ஜப்பான் கம்போடியா தாய்லாந்தில் வெட்டுக்கிளி பொரியல் ரொம்ப ஃபேமஸ் தெரியுமா.. சைனா வியட்னாமில் பாம்பு சூப் மெயின் ஐட்டம். சீனாவில் சூப்பில் பல பாம்புகளுடன் நல்ல பாம்பும் உண்டு.. சிக்கன் சேர்த்து சமைப்பார்கள்.”
குப்புசாமி – “கர்னல் போதும்.. ஒரு மாதிரி குமட்டற மாதிரி இருக்கு.”
நாகமுத்து – “தமிழகத்தில் ஈசலுடன் புளித்த தயிர் சேர்த்து உண்டார்கள் பழந்தமிழர்கள்.. ஒரு சங்க இலக்கியப் பாட்டிலும் இது சொல்லப்படுது. சிறு பாணாற்றுப் படையில் நல்லியக் கோடன் ஆட்சிக்காலம் குறித்த பாடலில் பாணர்களுக்குக் கொடுத்த உணவைப் பற்றி ஈசல் தயிர் கலவை இப்படி வருகிறது.
ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த
குறும்பி மூசின் கிளையொடு நாலாது
முறிவாய் உளர்ந்த ஓமை அம் காட்டு
அக நானூறு பாடல் 394
….அடும்பு வயல் ஈயல்
கொழுங்குறை பரப்பி
நெய் கனிந்து உருகிய
வெண் சோறு
புற நானூற்றில் 119 பாடல் கபிலர் பாரி வள்ளலைப் பற்றிப் பாடியுள்ள பாடலிலும் சொல்லப்படுகிறது.
“செம்புற்று ஈயலின் இன் அளைப் புளித்து
மென் திணையாணர்த்து நத்துங் கொல்லோ”
குப்புசாமி – “பொன்னியின் செல்வனில் ஹீரோ வந்தியத் தேவன் அசைவ உணவு உண்பான்.. அதைக் குறித்து கல்கி அவர்கள் எழுதும் போது அக்காலத்தில் பெரும்பாலும் அசைவ உணவையே வீரர்கள் உண்டனர் என எழுதுவார்.. நம் வந்தியத் தேவனும் விலக்கல்ல”
நாகமுத்து – “சார் முட்டை சைவமா அசைவமா.. சைவ முட்டை உண்டா…?”
குப்புசாமி – “உண்டு.. குஞ்சு பொரிக்காத தன்மையுடைய முட்டைகள் உருவாக்கப் படுகின்றன.. சேவல் இன்றி உருவான கோழி முட்டைகள் அவை.. unfertilized eggs. அவை குஞ்சு பொரிக்காது..
தவிர முழுக்க முழுக்க பாசிப் பயறு, சோயா பட்டாணி கொண்டைக்கடலையில் இருந்து புரோட்டீன் பிரித்து வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவுக்கு காரட், மஞ்சள் தூள் சேர்த்து தயாராகும் சுத்த சைவ முட்டையும் உள்ளன. இவை திரவ வடிவில், பவுடர் ஆக இருக்கும்.. முட்டை போல் இருக்காது. சைவ ஆம்லெட் போடலாம்.
சில கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கு மஞ்சள், பூண்டு சோளம் கீரைகள் மட்டும் கொடுத்து வளர்க்கிறார்கள்.. அவை இடும் முட்டைகளும் சைவ முட்டை என்று விற்கிறார்கள்.
நாகமுத்து – கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் அவர்கள் ஒரு சமையல் யூ ட்யூப் சேனல் நடத்துகிறார். அதில் சைவ ஈரல் வறுவல், சைவ நெத்திலி மீன் குழம்பு, சைவ மட்டன் வருவல், சைவ கோலா உருண்டை செய்து அசத்துகிறார். சுவை குன்றாமல்.. சமைக்க வாழைப்பூ, பலா மூசு, மீல் மேக்கர் சோயா பீன்ஸ், பாசிப் பருப்பு தோலுடன் பயன் படுத்துகிறார்.
டி. வி. பி என்பது textured vegetable Protein. 1960 ல் ஆர்ச்சர் டேனியல் மிட்லண்ட் என்பவர் முழுவதும் சைவ பொருட்களால் ஆன இறைச்சியை உற்பத்தி செய்தார். சோயா, பருத்தி விதை, கோதுமை ஓட்ஸ் இவற்றால் தயார் ஆனது அது.
கர்னல் - என்ன வேணா சொல்லுங்க.. மீன் சைவம் தான்.
குப்புசாமி – இந்தியாவில் வங்காளம் ஒடிசாவில் மீன் சைவ உணவு தான்.. மீனுக்கு அங்கு கடல் காய், ஜல புஷ்பம் என்று பெயர். துர்க்கை வழிபாட்டிலும் மீன் பிரசாதம் உண்டு. கோவா மற்றும் மகாராஷ்டிரா பக்கம் மீனை கடல் தானியம் என அழைத்து சாப்பிடுகிறார்கள்.
வணிகச் சட்ட ரீதியாக FSSAI தர நிர்ணயத்தில் மீன் பச்சை புள்ளியுடன் வராது.. தாவரம் பால் இவற்றால் தயார் ஆனால் மட்டுமே பச்சை புள்ளி தருவர். அது அசைவம் என்றே அரசு சொல்கிறது
கர்னல் – ஏழைகளுக்கு இன்னிக்கு காய்கறி விற்கும் விலையில் சாம்பார், பொரியல், வறுவல், மசியல், கூட்டு, பச்சடி எல்லாம் கட்டுபடி ஆகாது சார்.. மீனை ஆய்ந்து ஒரு குழம்பு கொதிக்க வச்சிட்டால் இரண்டு நாட்கள் தாராளமாய் ஓடிவிடும்..
குப்புசாமி - குஜராத் பக்கம் கிடைக்கும் தங்க மீன் Ghol fish விலை என்ன தெரியுமா.. ரூ. ஒரு லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை விற்கிறது. இந்த மீனின் காற்றுப் பையில் இருந்து எடுக்கப்படும் இழை சர்ஜிகல் ஆபரேஷன்களில் தையல் போட உதவுகிறது..
அந்த இழை உடலோடு தசையோடு கரைந்து விடும் தன்மை உடையது. பஃபர் மீன் என்று ஒரு மீன் அதிக விலையுள்ள விஷ மீன்.. அதன் விஷம் டெட்ரோ டோ டாக்ஸின் சயனைடு விஷத்தை விட 1200 மடங்கு வீரியம் உள்ளது.. மிகச் சிறிய அளவில் அதை புற்று நோய் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
நாகமுத்து – மீன் பாண்டிய நாட்டு கொடிச் சின்னம்.. மச்ச அவதாரம் எடுத்தவர் பெருமாள்.. அது போதுமே மீனின் சிறப்புக்கு.
கர்னல் நீங்க வெஜ் ஆ நான் வெஜ் ஆ
கர்னல் – நான் ஃபிஷ்ஷடேரியன்.. மீன் மட்டும்
குப்புசாமி – நாகமுத்து சார் நீங்க
நாகமுத்து – நான் எக்கடேரியன்.. முட்டை மட்டும். நீங்க சார்
வெஜிடேரியனா.. நான் வெஜிடேரியனா
குப்புசாமி - நான்.. வெஜிடேரியன்..