

வளம் நிறைந்த இந்தப் பூவுலகில், வருங்காலத்தைக் கணிப்பதில் புகழ் பெற்றவர்களாகச் சிலரை வரலாறு அடையாளப்படுத்துகிறது. அவர்களில் நாஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வாங்கா (Baba Vanga) ஆகிய இருவரும் சிறப்பிடத்தைப் பிடித்துள்ளனர். டிமிடர் குஷ்டெரோவ், ரியோ டாட்சுகி, பாண்டோ சர்சேவ், ஏதோஸ் ஸலோம், அலோய்ஸ் இர்ல்மெயர், ரெவரண்ட் ஸ்டாய்னா மற்றும் ஒல்ப் மெசிங் ஆகியோரும் லிஸ்டில் உள்ளனர்.
எதிர்காலம் எப்படி அமையும்? என்னென்ன இயற்கைச் சீற்றங்கள் எந்தெந்தப் பகுதியில் எவ்வெப்போது நிகழும் என்று கூறியுள்ளனர்.
மற்றோர் அவ்வப்போதான நிகழ்வுகளைக் கூற, பாபா வாங்காவும், நாஸ்ட்ராடாமஸும் நீண்ட கால நிகழ்வுகளைப் பற்றிக் கூறியுள்ளதால் இவர்களுக்குத் தனியிடம் போலும்.
பாபா வாங்கா (Baba Vanga) ஒரு பெண்மணி என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்களென்று தெரியவில்லை. சுமார் 84 வயது வரை வாழ்ந்து, தன் வாழ்நாளில் பல கணிப்புகளைக் கூறிய அவரது வாழ்க்கை, அவ்வளவு சிறந்ததாக இல்லை.
இளமையில் ஏழ்மையும்,13 வயதில் பார்வை இழப்புமென்று அவர் பட்ட சிரமங்கள் அதிகம். ’உளிக்குப் பயப்படும் கல் சிலையாகாது!’ என்பதற்கிணங்க, சிறு வயதில் சிரமப்பட்டாலும் வரலாற்றில் வளமான இடத்தைப் பிடித்து விட்டார்.
ஒட்டோமான் பேரரசில் (தற்போது வடக்கு மாசிடோனியா),1911 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் நாள், பாண்டே சுர்சேவா-பராஸ்கேவா சுர்சேவா தம்பதியருக்கு, குறைப்பிரசவக் குழந்தையாகப் பிறக்கிறார்.
குழந்தை பிழைக்குமா? என்ற சந்தேகம் காரணமாக பெயர் சூட்டப்படவில்லை. பின்னர் குழந்தை அழுததைக் கண்ட மருத்துவச்சி ஆனந்த மிகுதியால் பெயர் சூட்ட ஆசைப்பட, அந்நியர் ஒருவர் ‘ஆண்ட்ரோமஹா’ என்ற பெயரைச் சொல்ல, அது சரியில்லையென்று நிராகரிக்கப்பட, பின்னர் வங்கேலிய பாண்டேவா என்ற பெயர் சூட்டப்படுகிறது.
அனைத்தும் கிரேக்கப் பெயர்களே! இருந்தும் பாபா வாங்காவே என்ற பெயரே நிலைத்து விட்டது.
1912 மற்றும் 13ல் இரண்டு போர்கள் நடைபெற, வாங்கா பிறந்த ஊர் பல்கேரியாவின் வசமாகிறது. அவளுக்கு 3 வயதானபோது, அடுத்த பிரசவத்தில் தாய் இறந்து விடுகிறார். தந்தையோ முதல் உலகப்போரில் கட்டாயமாகச் சேர்க்கப்படுகிறார். ஏழ்மை வாட்ட, பசி, பட்டினியில் காலம் கழிகிறது மெல்ல! போர்க் களத்திலிருந்து திரும்பிய தந்தை மறுமணம் புரிந்து கொள்ள, சிற்றன்னையின் கீழ் வாழ்க்கை!
வாங்காவின் 13 வயதில், ஒரு நாள் வெளியிற்சென்றபோது, அடித்த சூறாவளிக் காற்று அவளை இழுத்துப் புழுதியில் வீச, மணலும், தூசும் கண்களில் புகுந்து விட்டன.
இரண்டு ஆபரேஷன்கள் செய்தும் சரியாகவில்லை. மூன்றாவது ஆபரேஷனை முழுமையாக முடிக்க இடந்தரவில்லை எகானமி!பணமில்லாததால் பார்வை திரும்பவில்லை.
செர்பியாவின் ஜெமுன் நகரில் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து பிரெய்லி படித்தார். இந்த நேரத்தில் சித்தி இறந்து விட, வீடு திரும்பி சகோதரர்களைக் கவனிக்கிறார். 1939 ல் ‘ப்ளூரிசி’ என்ற நோயால் தாக்கப்படுகிறார். இறந்து விடுவார் என்று எல்லோரும் கைவிட்ட நிலையில், தெய்வாதீனமாகப் பிழைத்துக் கொள்கிறார்!
இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? ஊர் திரும்புவார்களா? என்ற ஆரூடத்தில் ஆரம்பிக்கிறது பாபா வாங்காவின் கணிப்பு.
அவரின் பல கணிப்புகள் உண்மையாகிப் போக, ஊர் மக்கள் கூட்டமாக வர ஆரம்பிக்கிறார்கள். 1942 ல் டிமிதர் குஷ்டெரோவ் என்பவரைக் கரம் பிடிக்கிறார். பல்கேரிய ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்படும் டிமிதர் குஷ்டெரோவ் சில கால வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு, குடிக்கு ஆளாகி, 1962 ல் இறந்து போகிறார்.
வாங்கா, சிலகாலம் பெட்ரிச் நகராட்சி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் சஜெஸ்டாலஜியில் பணிபுரிகிறார். அப்போதே அவரிடம் ஆரூடம் கேட்க மக்கள் கூட்டமாக வர ஆரம்பிக்கிறார்கள். பல்கேரிய காவல்துறையும், கம்யூனிஸ்டும் எதிர்த்தாலும், கூட்டம் கட்டுக்கடங்கவில்லை. சிறிது காலத்திலேயே பிரபலமாகி விட, அவரைச் சந்திக்க வருபவர்களிடம் அரசு கட்டணம் வசூலிக்கிறது.
பல்கேரியர்களுக்கு 10 லெவா, அயல் நாட்டினருக்கு 30 லெவா கட்டணம். அரசுக்கு நல்ல வருமானம்! பொது மக்கள் மட்டுமல்லாது ராணுவத் தளபதிகளும், அரசியல் தலைவர்களும் தங்கள் எதிர்காலம் பற்றி அறிய வாங்காவின் இருப்பிடத்திற்குப் படையெடுத்தார்கள்.
1970 ல் வாங்காவைப் புகழ்ந்து 'இரும்புத் திரைக்குப் பின்னாலுள்ள மனநல கண்டுபிடிப்புகள்’ என்ற நூல் வெளியாகிறது.
வாங்காவின் வருமானம் செழித்தோங்க, ரூபிட் கிராமத்திற்குக் குடிபெயர்ந்து, அங்கு தேவாலயம் கட்டுகிறார். தேவாலயத்தில் பாபா வாங்காவின் சித்திரங்கள் வரையப்பட, அது ஆர்த்தடாக்ஸ் நியதிச் சட்டத்திற்கு முரணானது என்று எதிர்ப்பு கிளம்புகிறது. 1996 ல் மார்பகப் புற்று நோயால் அவர் இறக்க, தேவாலயத்திற்கு அருகிலேயே அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவரின் கணிப்புகள் பல அவ்வாறே நடந்துள்ளன. இரண்டாம் உலகப் போர் முடிவு, டயானாவின் மரணம், பல்கேரிய பூகம்பம் மற்றும் மியான்மர் பூகம்பம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
பொய்த்துப் போன கணிப்புகள் சிலவும் உண்டு. உதாரணமாக இரண்டைக் கூறலாம்.
2010-16 க்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் அணுசக்திப்போர் நடைபெறுமென்ற கணிப்பு-அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியே கடைசி என்ற கணிப்பு.
45 மற்றும் 47 வது பிரசிடெண்டாக ட்ரம்ப் தூள் கிளப்பி வருகிறார். உலகின் அனைத்து ஊடகங்களிலும் தினந்தினம் அவரைப்பற்றிய செய்திகளே முக்கிய இடம் பெறுகின்றன.
பாபா வாங்காவின் (Baba Vanga) மீதமுள்ள கணிப்புகள் எவ்வாறாகும் என்று பார்க்கலாம்.