

ப்ரியா சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஐ. டி. கம்பெனியில் வேலை பார்த்துவந்தார். இது வடகிழக்கு பருவ மழை காலம். மழை வெளுத்து வாங்கியது. இன்று ப்ரியா அலுவலகத்திற்கு குடை கொண்டு வர மறந்துவிட்டார்.
மாலை 5 மணி. ஆபிசு வேலை முடிந்துவிட்டது. வெளியே வந்தார். கன மழை கொட்டிக்கொண்டு இருந்தது. பக்கத்தில் அவரது பக்கத்து டீம் கிஷோர் நின்றுகொண்டு இருந்தார். அவருக்கு ப்ரியா குடை கொண்டு வரவில்லை என்று புரிந்தது. மின்னல் பளிச் என்று வந்தது. கிஷோர் பேசினார்.
“எக்ஸ்கியுஸ் மீ மேடம்… நீங்கள் குடை கொண்டு வரவில்லை என்று புரிந்தது. நீங்கள் என் குடையை எடுத்துச் சொல்லுங்கள்..!“
கிஷோர் தனது பையில் இருந்து ஒரு குடையை எடுத்து ப்ரியாவிடம் கொடுத்தார். அது வெள்ளை நிறம். குடையில் முழுக்க முழுக்க காதல் சின்னம் இருதயம் சிவப்பு நிறத்தில் இருந்தது.
ப்ரியா வாங்கி கொண்டார். பளிச் மின்னலில் அவர் தனது இதயத்தில் கிஷோரை பார்த்து தன் மனதை பறிக்கொடுத்தார்.
மறுநாள் ஆபிசுக்கு வந்த உடன் தனது பக்கத்து டீமில் கிஷோரை தேடினார். அவர் நேற்று தான் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார். செய்தி கேட்ட ப்ரியாவிற்கு ஷாக்…! அந்த டீமில் உள்ள பலரிடம் கிஷோர் போன் நம்பர் கேட்டார். அதற்கு அவர் யாருக்கும் தனது நம்பரை தருவது இல்லை என்ற பதிலே கிடைத்தது.
ப்ரியாவிற்கு வருத்தம். நாட்கள் ஓடின. மாதங்கள் பறந்தன. வருடங்கள் நகர்ந்தன. 3 வருடங்கள் கழிந்தன.
ஜனவரி மாதம் சென்னையில் நடந்த புத்தக கண்காட்சிக்குச் சென்றார். கிஷோர் ஒரு ஸ்டாலில் இருந்தார். அது ஓஷோ புத்தக ஸ்டால். அங்கு இருந்தவர் “சார்.. ஒரு மேடம் குடையை இங்கே விட்டு விட்டு போய் விட்டார். அதோ பாருங்கள்… ஸ்டால் நம்பர் 66-ல் இருக்கிறார். நான் வெளியே போகமுடியாது. சிவப்பு சுடிதார் போட்டு இருக்கிறார். தயவுசெய்து கொடுத்து விடுங்கள்…” என்று குடையைக் கொடுத்தார்.
கிஷோருக்கு ஷாக்…! அது அவருடைய குடைதான்.
ஸ்டால் நம்பர் 66-க்கு போனார்.
“மேடம்…!”
ப்ரியாவிற்கு பெரிய ஷாக்…!
“இது உங்கள் குடை. ஸ்டால் 33-ல் விட்டுவிட்டு போய்விட்டீர்கள்…!”
குடையை வாங்கி… “இது உங்கள் குடை… 3 வருடங்களுக்கு முன் நீங்கள் கொடுத்தது…!”
“தெரியும்… உங்களுக்கு நினைவு இருக்குமா என்று சந்தேகம். அதான்…!”
மென்று முழுகினார்.
ப்ரியா கேட்டார்:
“சார் நாம் காபி கஃபே போகலாமா…? நான் உங்களிடம் பேசவேண்டும்…!”
“சரி…!” என்று சொல்லி இருவரும் போனார்கள்.
ப்ரியா நேரடியாக விஷயத்திற்கு வந்தார். "நீங்கள் யாருக்கும் நம்பர் கொடுக்கமாட்டீர்களா…?”
“ஆம். உங்களுக்கு வேண்டுமானால் கொடுக்கிறேன்…!”
“அடக் கடவுளே…!”
இருவரும் காபி குடித்து முடித்தார்கள்.
ப்ரியா பேசினார்:
“கிஷோர்… நீங்கள் என்னை திருமணம் செய்துகொள்வீர்களா…?”
கிஷோருக்கு பெரிய ஷாக்..!
அவர் பேசினார்.
“3 வருடங்களுக்கு முன்பே நான் உங்களைக் காதலித்தேன். ஆனால் பயம் வந்தது. தயக்கம் அதிகம் இருந்தது. அதனால் நான் சொல்லவில்லை..!”
சுமார் 3 மணி நேரம் இருவரும் மனம்விட்டு பேசினார்கள்.
மதியம் வந்துவிட்டது.
ப்ரியா “சாப்பிடலாமா…?”
“ஸ்யூர்… ! வாங்க போகலாம்..!”
இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். கிஷோர் சொன்னது ப்ரியாவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஆனால், அதிக சந்தோஷம் அடைந்தார். பிறகு புல்வெளியில் உட்கார்ந்து பேசினார்கள்.
இருவருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆனது. மார்ச் மாதம் கல்யாணம்.
குடை காதல் வித்தியாசமானது...!
அவர்கள் கல்யாணத்திற்குச் சாப்பிட வாருங்கள்…!
******
2. காலமெல்லாம் காதல் வாழ்க!!
சரவணன் ஒரு ஆவண பட இயக்குனர். தனது படத்திற்காக ஒரு பழைய வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெற்று, நடுச்சுவரில் ஒரு 9 சதுர அடியைத் தோண்டினார். தோண்டும்போது அவருக்கு ஒரு கடிதம் கிடைத்தது. முகவரி இல்லை. கவரைத் திறந்து பார்த்தார்.
அதில்…
டியர் அர்ஜுன்,
உனக்கு நான்; எனக்கு நீ மட்டுமே..!
கடைசியாக உன்னைப் பார்க்க விரும்புகிறேன்.
தவறாமல்… நீ சனிக்கிழமை மாலை 6 மணிக்கு
எக்மோர் ஸ்டேஷன் வந்துவிடு.
மீனா…
கடிதம் மிகவும் பழையது. தொல்லியல் துறையைத் தொடர்புகொண்டு அது 20 அல்லது 25 வருடங்களுக்கு முன் என்று ஊர்ஜிதம் செய்தார்.
அடுத்து, சென்னையில் உள்ள அனைத்து அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் எல்லாவற்றுக்கும் இமெயில் அனுப்பினர். அதாவது அர்ஜுன் அல்லது மீனா என்று யாராவது இருக்கிறார்களா…? என்று.
இரண்டு நாட்களில் திருவேற்காடு அனாதை இல்லத்தில் இருந்து பதில் வந்தது. ‘அர்ஜுன் என்ற 60 வயது நபர் ஒருவர் இருக்கிறார். நீங்கள் தாராளமாக வரலாம்’ என்று எழுதி இருந்தார்கள்.
அன்று மாலையே சரவணன் திருவேற்காடு கிளம்பினார்.
அர்ஜுனைப் பார்த்தார். அவருக்கு அல்சிமர் நோய். அதாவது ஞாபக மறதி.
சரவணன் அந்தக் கடிதத்தை அவரிடம் காண்பித்தார்.
ஜடமாக இருந்த அர்ஜுனுக்கு மீனா எழுதிய கடிதம் என்று புரிந்தது. கண்களில் கண்ணீர்.
சரவணன் இவர்தான் தான் தேடி வந்த அர்ஜுன் என்று புரிந்தது.
கடிதம் பார்த்த அர்ஜுன், மீண்டும் மீண்டும் “மீ… மீ… மீ… மீ… !” என்று வாய் திறந்து பேசினார். அவரால் “னா“ என்று முடிக்க முடியவில்லை.
சரவணுக்கு இனி மீனாவைத் தேட வேண்டும் என்று முடிவு செய்தார். சரவணன் வேறு எதையும் பற்றி சிந்திக்கவில்லை. எப்படியாவது அர்ஜுனை குணப்படுத்த வேண்டும் என்றும், அர்ஜுன் மற்றும் மீனாவை சந்திக்க வைக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.
திருவேற்காடு இல்லத்தில் அனுமதி பெற்று, அர்ஜுனை எக்மோர் ஸ்டேஷன் அழைத்து செல்லவேண்டும் என்று முடிவு செய்தார்.
அவர் தேர்ந்து எடுத்த நாள் சனிக்கிழமை. நேரம் மாலை 6 மணி.
இல்லம் அனுமதி தந்தது.
சனிக்கிழமை. மாலை 5.46. சரவணன் அர்ஜுனை ஒரு வீல் சேரில் ஸ்டேஷன் உள்ளே அழைத்துச் சென்றார்.
சுற்றிலும் பார்த்தார். அவருக்கு ஷாக்.
தூரத்தில் ஒரு நடுத்தர வயது பெண் சுற்றும் முற்றும் பார்த்தார். சரவணன் அவரிடம் சென்று “உங்கள் பெயர் என்ன..?” என்று கேட்டார்.
மீண்டும் மீண்டும் ஷாக்.
அவர் தனது பெயர் மீனா என்று சொன்னார்.
சரவணன் அவரிடம் “அர்ஜுனை எதிர்பார்த்து உட்கார்ந்து இருக்கிறீர்களா..?” என்று கேட்டார்.
அவர் “ஆம்...” என்றார்.
"எத்தனை நாளாகக் காத்து இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
சனிக்கிழமை... சனிக்கிழமை... சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு இங்கு வந்து அர்ஜுனை சந்திக்க வருவேன்.
“எத்தனை வருடங்களாக...?”
“சுமார் 20 அல்லது 25 வருடங்களாக…!” என்று சொன்னார்.
சரவணுக்கு எல்லாம் புரிந்தது.
மீனாவிடம் “5 நிமிடங்கள் இங்கேயே இருங்கள்.. நான் வந்து விடுவேன்…!”
சரவணன் வீல் சேரில் அர்ஜுனை அழைத்து வந்தார்.
இருவரும் சந்தித்தார்கள். இருவரும் அழுதார்கள்.
அர்ஜுன் “மீ..னா…” என்று பேசி விட்டார். அவருக்கு பழையபடி ஞாபகம் மெல்ல மெல்ல வந்தது.
இருவரும் கை குலுக்கினார்கள்.
சரவணன் கண்களில் கண்ணீர்.
இருவரும் ஆரத் தழுவினார்கள்.
சரவணன் மிகவும் சந்தோஷம் அடைந்தார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இருவரும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
ஆஹா…! காலம் எல்லாம் காதல் வாழ்க… !!