

ஆசியாவிலேயே நடிகர் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக, திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையை பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ்நாட்டு ரசிகர்களைத் தனது ஸ்டைல்களால் கவர்ந்து, தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் ரஜினிகாந்த், எழுபத்தைந்து வயதாகி விட்டபோதும், இன்னும் திரையில் தனது ஸ்டைல்களுடன் கூடிய நடிப்பில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்த ராமோஜிராவ் கெய்க்வாட் - ரமாபாய் இணையருக்கு நான்காவது குழந்தையாக 1950ம் ஆண்டு டிசம்பர் 12 அன்று கர்நாடக மாநிலம், பெங்களூரில் பிறந்தார். இரவுக் காவலராகப் பணியாற்றி வந்த இவரது தந்தை, மராட்டியப் பேரரசர் சிவாஜியின் மேல் கொண்ட விருப்பத்தால் இவருக்கு சிவாஜிராவ் கெய்க்வாட் எனும் பெயரை வைத்தார். இவருக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது, இவரது தாய் இறந்தார். பெங்களூரில் உள்ள கவிபுரம் அரசு கன்னட மாதிரி தொடக்கப் பள்ளியில் பயின்று வந்த இவரை, அவரது சகோதரர் இராமகிருஷ்ணா மடத்தில் சேர்த்தார். அங்கு அவருக்கு வேதங்கள் மற்றும் மரபு வழிகள் குறித்த பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ளத் தொடங்கினார்.
இராமகிருஷ்ணா மடத்தில் நடத்தப்பெற்ற நாடகத்தில் ஏகலைவனின் நண்பராக நடித்தார். அதன் பிறகு அவர் நடிப்பிலும் ஆர்வம் கொள்ளத் தொடங்கினார். ஆறாம் வகுப்பிற்குப் பின்பு ஆச்சார்யா பாதசாலாப் பொதுப்பள்ளியில் படிக்கத் தொடங்கினார். இங்கும் நாடகங்களில் நடிப்பதில் அதிகக் கவனம் செலுத்தி வந்தார். முன் பல்கலைக்கழகப் படிப்பு (Pre-University Course) படித்துவிட்டு, கூலி வேலை உட்பட பல வேலைகளைச் செய்து வந்தார். அதன் பின்னர் பெங்களூர் போக்குவரத்து நிறுவனத்தில் நடத்துனராகப் பணியாற்றத் தொடங்கினார். அக்காலக்கட்டத்தில் கன்னட நாடக ஆசிரியர் டோபி முனியப்பா என்பவரது புராண நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்து வந்தார்.
நாடக நடிப்பில் தொடர்ந்த ஆர்வம், அவருக்குத் திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க, அப்போது சென்னையில் புதிதாக உருவாக்கப்பெற்ற சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பிற்கான படிப்பில் சேர முடிவு செய்தார். அவரது குடும்பத்தினர் அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திரைப்பட நடிகராக வேண்டுமென்கிற அவரது ஆசையில், குடும்பத்தினர் அனைவரது எதிர்ப்பையும் மீறி அவருடன் பணியாற்றிய ராஜ் பகதூர் என்பவரது ஊக்குவிப்பு மற்றும் நிதியுதவியுடன் சென்னை வந்து சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சியில் சேர்ந்தார்.
திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சியின்போது, இவரை கவனித்த தமிழ் திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர், இவருக்கு அவருடைய மேஜர் சந்திரகாந்த் படத்தில் பயன்படுத்திய ரஜினிகாந்த் என்ற புதிய பெயரைச் சூட்டி, விரைவாகத் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும்படி தெரிவித்தார். அவரது அறிவுரைப்படி, தமிழ் மொழியை மிக விரைவாகக் கற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, 1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அவருக்கு ஒரு சிறிய வேடம் கொடுத்து நடிக்கச் செய்தார். பின்னர், மூன்று முடிச்சு (1976) படத்தில் ஒரு பெண்ணாசை பிடித்தவராக நடித்தார். அப்படம் அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். மேலும், புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதையும் நிரூபித்தார்.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 170 படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் எந்தப் படத்தில், எப்படி நடித்தாலும் சரி, இவரது ரசிகர்கள் இவருடைய ஸ்டைல்களையே மிகவும் விரும்பினர். எனவே, ஒவ்வொரு படத்திலும் இவர், இவருடைய ஸ்டைல் வித்தியாசமாக இருந்தது. ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்புக்கு தமிழகத்தில் மட்டுமின்றி, ஜப்பானிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். இவருடைய ஸ்டைலை பற்றி பாட்சா படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘ஸ்டைலு ஸ்டைலுதான்… இது சூப்பர் ஸ்டைலுதான்… உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்…’ என்ற பாடல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவருடைய ஸ்டைல்களால் கவரப்பட்ட ரசிகர்கள் இவருடைய அனைத்துப் படங்களையும் வெற்றிப் படங்களாக மாற்றினர். இதனால் இவரது திரைப்படங்கள், தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தைப் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது. 2007ம் ஆண்டில் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். இதன் மூலம் ஆசியாவிலேயே நடிகர் ஜாக்கிஜானுக்கு அடுத்த நிலையில், அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார். ரஜினிகாந்த்திற்கு எழுபத்தைந்து வயதாகி விட்ட போதும், இன்னும் திரையில் இவரது ஸ்டைல்களால் இன்னும் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழக அரசு திரைப்பட விருதுகளை ஆறு முறை பெற்றுள்ளார். இதேபோன்று சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் பல முறை பெற்றுள்ளார். 2019ம் ஆண்டில் திரைப்படத் துறையில் மிக உயர்ந்த இந்திய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது. உலக திரைப்படங்களுக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக, இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழாவில் (IFFI) இவருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டிருக்கிறது. தேசியத் திரைப்பட விருது, நந்தி விருது, மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல திரைப்பட விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
2004ம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு, ‘பத்ம பூஷண்’ விருதும், 2016ம் ஆண்டு கலைகளில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதத்தில் இவருக்கு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான ‘பத்ம விபூஷண்’ விருதும் வழங்கிச் சிறப்பு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள இவரது பல ரசிகர்கள் அரசியலில் ஈடுபடும்படி அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். 2017ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று, தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். தான் தொடங்கும் அரசியல் கட்சி 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் தனது கட்சி பதவி விலகும் என்றும் சொன்னார். ஆனால், அவர் சொன்னபடி 2021ம் ஆண்டு அவர் அரசியலுக்கு வரவில்லை. அதோடு, அரசியலுக்கு தான் வரப்போவதில்லை என்றும் தெரிவித்து விட்டார்.
ராஜா சின்ன ரோஜா எனும் படத்திற்கு கவிஞர் வைரமுத்து எழுதிய ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா… சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணா… ஒங்க பேர ஒரு தரம் சொன்னா… நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்…’ என்ற பாடல் வரிகள் அனைவரையும் கவர்ந்த பாடலாக அமைந்தது. தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராகத் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அது மிகையில்லை.