‘சுதந்திரா’ கட்சியை தொடங்கி தமிழ்நாட்டில் ஆட்சியை மாற்றிய மூதறிஞர் இராஜாஜியின் சவால் அரசியல்!

டிசம்பர் 10, மூதறிஞர் இராஜாஜி பிறந்த தினம்
Rajaji who changed Tamil Nadu politics
Mootharignar Rajaji birthday
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

சேலம் நகராட்சி உறுப்பினர் பதவியில் தொடங்கி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் பதவி வரை உயர்ந்த பெருமைக்குரியவர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி என்று அழைக்கப்படும் இராஜாஜி. வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவராக இருந்த இராஜாஜி, ‘பாரத ரத்னா’ விருது பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி எனும் கிராமத்தில் சக்கரவர்த்தி வெங்கடார்யா - சிங்காரம்மா இணையருக்கு 1878ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாளன்று பிறந்த இராஜாஜி, பள்ளிக்கல்வியை ஒசூரிலும், உயர்நிலைக் கல்வியை பெங்களூரிலும். கல்லூரி கல்வியை பெங்களூர் மத்தியக் கல்லூரி மற்றும் சென்னை மாகாணக் கல்லூரிகளிலும் படித்தார். 1898ம் ஆண்டில் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் என்பவர் மகளான அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர். 1900ம் ஆண்டு முதல் வழக்கறிஞர் தொழிலைச் செய்து வந்தார்.

இதையும் படியுங்கள்:
மூதறிஞர் ராஜாஜி மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள்!
Rajaji who changed Tamil Nadu politics

அதன் பின்னர் அரசியலில் ஈடுபட்டு, 1917ம் ஆண்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் அந்நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930ம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்திச் சிறை சென்றார். 1937ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதன்மை அமைச்சராகப் பொறுப்பேற்று 1940ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது வி.எம்.முனுசாமி என்ற பட்டியல் இனத்தவரை இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் 1948ம் ஆண்டு ஜூன் 21 வரை மேற்கு வங்க ஆளுநராகவும், 1948ம் ஆண்டு ஜூன் 21 முதல் 1950ம் ஆண்டு ஜனவரி 26 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பணியாற்றினார். அதன் பின்னர், 1950ம் ஆண்டு டிசம்பர் 26 முதல் 1951ம் ஆண்டு அக்டோபர் 25 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952ம் ஆண்டு ஏப்ரல் 10 முதல் 1954ம் ஆண்டு ஏப்ரல் 13 வரை பதவி வகித்தார்.

இதையும் படியுங்கள்:
ஊழல் இல்லாத உலகை உருவாக்க உங்களின் கடமை என்ன?
Rajaji who changed Tamil Nadu politics

அதன் பின்னர், ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959ம் ஆண்டில் சுதந்திரா கட்சியை தொடங்கி, 1962, 1967 மற்றும் 1972ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டார். 1967ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன் முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலரத் துணை நின்றார். அவருடன் கூட்டணி கண்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சி.என்.அண்ணாதுரை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்றத் தேர்தலிலும் சுதந்திரா கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக இருந்தது.

1937ம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மது விலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ம் ஆண்டில் விற்பனை வரியை விதித்தார். 1952ம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மது விலக்கை அமல்படுத்தினார் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தேசத்தின் ஒற்றுமை என்பது அதன் ஆன்மிக ஒற்றுமையே!
Rajaji who changed Tamil Nadu politics

இராஜாஜி தமது ஆங்கில இலக்கியத்திற்குச் சிறப்பான பங்களிப்புகளைச் செய்துள்ளார். இராமாயணம் மற்றும் மகாபாரத காவியங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சி.யுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ் பெற்ற கர்நாடக இசைப்பாடலான ‘குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா’ எனும் பாடல் இவர் இயற்றிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ‘சக்கரவர்த்தித் திருமகன்’ எனும் இராமாயணம் நூலுக்கு 1958ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. 1954ம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான ‘பாரத ரத்னா’ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு, கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், சென்னை கிண்டியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவு மண்டபமும் அமைந்துள்ளது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள மண்டபத்திற்கு இராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவையனைத்தும் இராஜாஜி அவர்களது நினைவைப் போற்றுவதாக அமைந்திருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com