

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதங்களில் தானியங்கள் மிக முக்கியமானவை. அதில் குறிப்பாக, பார்லியில் அதிக சத்துக்கள் உள்ளன. பார்லியை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டியோ அல்லது தானியத்துடன் சேர்த்தோ அருந்தும் போது அது பல உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகிறது. வாருங்கள் இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
பார்லி நீர் என்றால் என்ன?
பார்லி நீர் என்பது பார்லி தானியங்களை நீரில் வேகவைத்துத் தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். இதில் சுவைக்காக எலுமிச்சை சாறு அல்லது பழச்சாறுகளைச் சேர்த்து எடுத்துக் கொள்வது வழக்கம். வடிகட்டப்பட்ட பார்லி நீர் செரிமானத்திற்கு உகந்தது என்றால், வடிகட்டப்படாத (தானியத்துடன் கூடிய) பார்லி நீர் நார்ச்சத்து நிறைந்தது. இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதோடு, நீர்ச்சத்தையும் பராமரிக்கிறது.
இதன் ஆரோக்கிய நன்மைகள்:
1. இதய பாதுகாப்பு:
பார்லியில் உள்ள 'பீட்டா-குளுக்கன்' (beta-glucans) எனும் வேதிப்பொருள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இதயத்திற்கு ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, இதயம் ஆரோக்கியமாகச் செயல்படத் துணைபுரிகிறது.
2. இரத்த சர்க்கரை மேலாண்மை:
நீரிழிவு நோயாளிகளுக்கு பார்லி நீர் ஒரு சிறந்த பானமாகும். இது உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயருவதைக் கட்டுப்படுத்துகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு நோயின் பாதிப்புகளைச் சமாளிக்க உதவுகின்றன.
3. உடல் எடை இழப்பு:
பார்லி நீரில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை அருந்தும்போது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதனால் அடிக்கடி நொறுக்குத் தீனிகள் சாப்பிடும் பழக்கம் குறைகிறது. சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியுடன் பார்லி நீரைச் சேர்த்துக்கொண்டால், உடல் எடை இழப்பை எளிதாக அடையலாம்.
4. செரிமான மண்டலத்தை வலுப்படுத்துதல்:
பார்லி ஒரு தானிய வகை என்பதால், இது குடல் இயக்கத்தைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சினையை நீக்குகிறது. உடலின் நச்சுக்களை வெளியேற்றி, உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற நீர்ச்சத்தை வெளியேற்ற இது உதவுகிறது.
5. புற்றுநோய் தடுப்பு:
தற்போதைய மருத்துவ ஆய்வுகளின்படி, பார்லியில் உள்ள 'பெரூலிக் அமிலம்' மற்றும் நார்ச்சத்து, பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்கள் உருவாவதையும், வளர்வதையும் தடுக்க வல்லவை என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
6. நோய் எதிர்ப்பு சக்தி:
பார்லியில் இரும்புச்சத்து, தாமிரம், மாங்கனீசு மற்றும் பி-வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. இதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கும்போது, கூடுதலாக வைட்டமின் சி கிடைக்கிறது. இது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்களுக்கு எதிராகப் போராட உதவுகிறது.
கவனிக்க வேண்டியவை:
பார்லி நீர் ஆரோக்கியமானது என்றாலும், சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பார்லியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், பழகாதவர்கள் திடீரென அதிக அளவில் அருந்தும்போது மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அளவோடு தொடங்குவது நல்லது.
பார்லியில் 'கிளூட்டன்' உள்ளது. எனவே, சீலியாக் நோய் உள்ளவர்கள் அல்லது கிளூட்டன் ஒவ்வாமை இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது அவசியம்.
கடைகளில் விற்கப்படும் பார்லி பானங்களில் அதிகப்படியான சர்க்கரை இருக்கலாம். எனவே, வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரித்து அருந்துவதே சிறந்தது.
பார்லி நீர் என்பது ஒரு எளிய பானமாகத் தெரிந்தாலும், அது தரும் நன்மைகள் மிக அதிகம். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை உணவில் சேர்த்துக்கொள்வது, உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும், ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் ஒரு சிறந்தது.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference