குளிர் கால பருவம் அதிகம் உள்ள வெளிநாடுகளில் சூரியக்குளியல் என்ற பெயரில் சூரிய ஒளியில் (Sunlight) உடலை காட்டி நிற்கும் வழக்கம் இருந்து வருகிறது.
சுட்டெரிக்கும் வெயில் காலத்தை வெறுக்காமல் சூரிய ஒளி உடலில் அன்றாடம் சிறிதளவு படும்படி பழகி வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
வைட்டமின் டி (Vitamin D) என்பது சூரிய ஒளியின் மூலம் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். அந்த வகையில் வைட்டமின் டி மனித உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து. மனித உடலில் வைட்டமின்-டி குறைந்தால், எலும்புகளும், தசைகளும், நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்பட்டு, உடல் சோர்வு, எலும்புகளில் வலி, தசை பலவீனம் காணப்படும்.
மேலும், மனச்சோர்வு, தூக்கமின்மை, கவன சிதறல், சரும வறட்சி, அரிப்பு, பல் சொத்தை என்று பல பாதிப்புகள் ஏற்படும்.
உடலுக்கு போதுமான வைட்டமின்-டி கிடைக்க சூரிய ஒளி அவசியம். சூரிய ஒளி மனித சருமத்தில் படும்போது வைட்டமின்-டி இயற்கையாக உருவாகிறது. இதனால் இதனை ‘சூரிய ஒளி வைட்டமின்’ என்று அழைக்கின்றனர்.
காலை சூரிய ஒளி உடலில் படும்போது, மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க உதவும். சருமத்தில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, சில தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வைட்டமின் D சூரிய ஒளி மூலம் உடலுக்கு கிடைக்கிறது.
ஆனால், நீங்கள் உண்ணும் உணவிலிருந்தும் குறைந்த அளவில் வைட்டமின் டி-யைப் பெறலாம். இது கொழுப்புள்ள மீன்கள், முட்டையின் மஞ்சள் கரு, சிவப்பு இறைச்சி மற்றும் வைட்டமின்கள் செறிவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள் போன்ற உணவுகளில் காணப்படுகிறது.
நகர்ப்புறத்தில் வசிப்பவர்களில் 70% பேருக்கும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சுமார் 20% பேருக்கும் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பரபரப்பான வாழ்க்கையால் இந்தியர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. வைட்டமின் டி குறைபாடு உடலின் அனைத்து பாகங்களையும் படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக வயதான காலத்தில் எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளில் அதிக வலி ஏற்படுகிறது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும் நவீனமயமாக்கல் மற்றும் மாறிவரும் வேலை கலாசாரம் காரணமாக வீட்டிற்குள் செலவிடும் நேரமும், அலுவலகத்தில் செலவிடும் நேரமும் அதிகரித்துள்ளது.
வெளியில் சென்றாலும் ஆடையால் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் வழக்கம் அதிகமாக உள்ளதால், உடலில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறது.
பொதுவாக, தினமும் காலை 10 மணிக்குள் அல்லது மாலை 5 மணிக்குள் உள்ள நேரத்தில் 10 முதல் 30 நிமிடங்கள், கை, கால், முகம் போன்ற சில பகுதிகள் வெளிப்படையாக இருக்கும்படியாக சூரிய ஒளியில் நிற்க வேண்டும். உடலில் மெல்லிய பருத்தி ஆடையை அணிந்துகொண்டு நிற்பதும் பலன் தரும்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரத்தை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் நின்றால் சருமம் சிவத்தல், சருமத்தில் கரும்புள்ளிகள் அல்லது நீண்டகால சேதம் ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும், உடல் வெப்பமும் கூடுவதால் தலைசுற்றல் ஏற்படலாம்.
சூரியனின் UV-B கதிர்கள் சருமத்தில் படும்போது, சருமம் வைட்டமின் D-ஐ உருவாக்குகிறது, இது வலுவான எலும்புகள், பற்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இன்றியமையாதது. காலை வெயிலில் சில நிமிடங்கள் செலவிடுவது இதன் குறைபாட்டைப் போக்க உதவும்.
உங்கள் உடல் வைட்டமின் D-ஐ திறம்பட உற்பத்தி செய்வதற்கு, ஜன்னல் வழியாக வரும் சூரிய ஒளி மட்டும் போதாது! அதேநேரம் அதிகப்படியான நேரடி சூரிய ஒளி தோல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மிதமான வெளிப்பாடு அவசியம்.