Do you know how to deal with people with disabilities?
Do you know how to deal with people with disabilities? https://www.sirajlive.com
வீடு / குடும்பம்

மாற்றுத்திறனாளிகளுடன் எப்படிப் பழக வேண்டும் தெரியுமா?

தி.ரா.ரவி

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி, சமுதாயத்தில் சக மனிதர்கள் போல அவர்களையும் சமமாக நடத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். அவர்களுடன் நாம் எப்படிப் பழக வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. மாற்றுத்திறனாளிகளை எப்போதும் மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களுக்குத் தேவை நாம் அவர்களை சக மனிதர்களாக நடத்துவதே தவிர, நமது பரிதாப உணர்ச்சி அல்ல.

2. செவித்திறன் குறைந்தவராக இருப்பின் அவரிடம் கத்திப் பேசக்கூடாது. நம் உதட்டசைவை வைத்து அவர்கள் நாம் பேசுவதைக் கண்டுபிடிப்பார்கள். முடிந்தால் சைகையில் பேசலாம். காது கேட்கும் கருவி பொருத்தியிருப்பவரிடம் சாதாரணக் குரலில் பேசினாலே போதும்.

3. பார்வைத் திறன் அற்றவர்களிடம் பேசும்போது, அவர்களைத் தொட்டுப் பேசக்கூடாது. பொதுவாக, இவர்களின் தலையைத் தடவுவது, தோளில் தட்டித் தருவது போன்றவற்றை இவர்கள் விரும்புவதில்லை.

4. அவர்களை பிறரிடம் அறிமுகப்படுத்தும்போது அவர்களுடைய பெயரை மட்டும் சொன்னாலே போதும். அவர்களுடைய இயலாமையை சொல்லி, ‘இவருக்குக் கண் தெரியாது, காது கேட்காது’ என்பது போல் சொல்லி அவர் மனதை புண்படுத்த வேண்டாம்.

5. மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாகப் பேச வேண்டும். உதாரணமாக, ஒருவர் வீல் சேரில் அமர்ந்திருந்தால், அவர் முகத்தைப் பார்த்து நேரடியாக பேச வேண்டுமே தவிர, அவருக்கு அருகில் உதவிக்காக நிற்பவரிடம் பேச வேண்டியது இல்லை. அதை அவர்கள் அவமானமாக நினைப்பர். அதேபோல், அவர்கள் பேசுவதை பொறுமையோடு கேட்க வேண்டும். சிலரால் சரியாகப் பேச முடியாமல், குழறலோடு பேசலாம். அவர்கள் பேசி முடிக்கும் வரை குறுக்கிடாமல் பொறுமையாக இருக்க வேண்டும்.

6. அவர்களுக்கு உதவ நினைத்தால், ‘நான் உங்களுக்கு உதவலாமா?’ என்று கேட்டு அவர்கள் அனுமதித்த பின்பே உதவ வேண்டும். அவர்கள், ‘இல்லை நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்றால் அவர்கள் உணர்வுக்கு மரியாதை கொடுத்து விலகிவிட வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை வந்தால் மனதார அவர்களுக்கு உதவலாம்.

7. வரிசையில் நிற்கும்போது மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை போகச் சொல்லலாம். அதேபோல வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தரலாம்.

8. சில மாற்றுத்திறனாளிகள் பொருட்கள் விற்றுக்கொண்டு வந்தால், அதை வாங்கி ஊக்கப்படுத்த வேண்டும். எதுவும் வாங்காமல், சும்மா பணம் கொடுத்தால் அவர்கள் மனம் புண்படும்.

9. சில சமயங்களில் அவர்கள் கோபம் கொண்டு கத்தினால், நாம் பொறுமை காத்து அமைதியாக பதிலளிக்கலாம். உடல் தொந்தரவு மற்றும் இயலாமை காரணமாகத்தான் அவ்வாறு அப்படிப் பேசுகிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT