எந்த ஒரு விஷயத்தையும் தாங்களாகவே இது இப்படித்தான் இருக்க வேண்டும் அது அப்படி இருந்தாக வேண்டும் என்று தீர்மானித்து அந்த மாதிரி நாம் இருக்கிறோமா என்று கம்பேர் செய்து சிறு குறை இருந்தாலும் பலர் சோர்ந்து விடுகிறார்கள்.
எதையும் குறையாக நினைக்கும்போது மகிழ்ச்சி பறிபோகிறது. ஆனால் இவை எதுவும் உண்மை அல்ல. மனம் செய்யும் மாயமே. குறையாக கருதுகின்ற எதையும் மாற்றமுடியும் என்பதை உணர்ந்தாலே தன்னம்பிக்கை விளையும்.
முதலில் உங்களிடம் எதையெல்லாம் குறை என்று கருதுகிறீர்களோ அவற்றையெல்லாம் உங்களுடைய ஒரு அங்கமாகும் கருதுங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அப்படிச் செய்யும்போது ஆழ்மனதில் இருந்து உங்களைப் பற்றிய எதிர்மறை எண்ணமெல்லாம் வெளியேறி தன்னம்பிக்கை பிறக்கும். அதன் பிறகு அமைதியான சூழலில் அமர்ந்து உங்கள் குறைகள் மாற்றக் கூடியவையா மாற்றமுடியாததா என்று ஆராயுங்கள். அப்படி மாற்றும்போது உங்கள் குறைகளே நிறைகளாக மாறும். புரியும்படி சொல்வதானால் உங்கள் வீட்டில் ஓர் இடத்தில் பெயிண்ட் உதிர்ந்திருக்கிறது. அந்த இடத்தில் ரீ பெயிண்ட் செய்கிறீர்கள். இப்போது குறை மறைந்து சிறப்பாகத் தெரியும் அல்லவா. அப்படித்தான் உங்கள் குறைகள் நீக்கப்பட்டதும் உங்கள் திறமை பளிச்சிடும். மாற்ற முடியாத குறை என்றால் அதை எப்படி உங்களுக்கு சாதகமாக மாற்றுவது என்று யோசியுங்கள்.
இங்கிலாந்தில் பள்ளி மாணவன் ஒருவன் வேகமாகப் படிக்க முடியாமல் திணறினான். ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அவனை கேலி செய்தனர். ஆனால் அவனுக்கு வருத்தம் ஏற்படவில்லை. எழுத்து கூட்டிக் கூட்டி வாசித்ததில் எழுத்துக்கள் எல்லாம் நட்பாகத் தோன்ற தன் 16 வயதில் Student என்ற இதழைத் தொடங்கினான். தனக்குப் பிடிக்கிற விஷயங்களை தனக்கு புரிகிற முறைகளை அழகாகக கோத்து பத்திரிகையில் தந்தான். அது பெரும் வெற்றி அடைந்தது. எதையும் தான் வாசிப்பதற்கு அதிக நேரமும் ஆவலையும் அதேசமயம் காதால் கேட்பவை மனதில் பதிவதையும் ஆழ்ந்து கவனித்தான். ஆடியோ வீடியோ என்று ரெக்கார்டிங் கடைகள் திறந்தான். இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து பல நாடுகளில் கிளைகள் விரிவடைந்து. தன் தொழில் வெற்றிகரமாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் தன்னைத்தானே நேசிக்கக்கூடிய மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒருவனுக்கே விரும்பிய வாழ்க்கையும் வெற்றிகரமான தொழிலும், கொழிக்கும் செல்வமும் சாத்தியம்.
ரிச்சர்டு பிரான்சன் என்பவர் டிஸ்லெக்சியா வால் பாதிக்கப்பட்டு பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார். ஆனால் பின்னாளில் சாதனை நாயகனாக உலகம் போற்றும் மில்லியனர் ஆனார். மகிழ்ச்சி என்பது ஒரு பழக்கம். அதை நாம் தான் நமக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை புரிந்து கொண்டு உங்களை நீங்கள் நேசியுங்கள்.அப்போது நீங்களும் உங்கள் குறைகளை நிறைகளாக்கி சாதனை புரிவீர்கள்.