Chithiraiyai Varaverkkum Sarakkondrai: Aachariyamaana sila Thagavalgal
Chithiraiyai Varaverkkum Sarakkondrai: Aachariyamaana sila Thagavalgal https://www.gardeningknowhow.com
ஆன்மிகம்

சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!

ஆர்.வி.பதி

கொன்றை அல்லது சரக்கொன்றை பேபேசியே (Fabaceae) என்னும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் மரமாகும். வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது கொன்றை மரம். சரக்கொன்றை மரத்தின் பூ, இலை, மரப்பட்டை முதலானவற்றிக்கு மருத்துவக் குணம் உண்டு. ஆங்கிலத்தில் இம்மரமானது ‘Golden Rain Tree’ என அழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கொன்றை மரம் ‘அக்வந்தா’ (தங்க மழை மரம்) என்று அழைக்கப்படுகிறது.

இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் இதன் தாயகமாகும். கொன்றை மரமானது இந்தியா மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகிறன. சித்திரை மாதத்தில் மட்டும் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும். தமிழ் புத்தாண்டான சித்திரையை வரவேற்கும் விதமாக சித்திரை மாதத்தில் பொன்னிறமான கொன்றை மலர்கள் சரம் சரமாக பூத்துக் குலுங்கும். இதனால் இதற்கு சரக்கொன்றை என்ற பெயரும் உண்டு. வசந்த காலத்தின் இறுதியில் இலைகளே பார்க்க இயலாத அளவிற்கு கொன்றை மரம் முழுவதும் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான மலர் கொன்றை. இலக்கியங்கள் சிவபெருமானை கொன்றை மலரை தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன. பல சிவத்தலங்களில் கொன்றை மரம் தல விருட்சமாக உள்ளதைக் காணலாம்.

கொன்றைப் பூ கேரளாவின் மாநில மலராகும். இதனால் கேரளாவில் இம்மலருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. கேரளாவில் சித்திரையில் கொண்டாடப்படும் ‘சித்திரை விஷு’ அன்று சரக்கொன்றை மலருக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கேரளாவில் விஷு பண்டிகையன்று காலை எழுந்ததும் பூத்துக் குலுங்கும் கொன்றை மலரைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. கொன்றை கேரளாவில் ‘கொன்னை’ என்று அழைக்கப்படுகிறது. மேலும் தாய்லாந்து நாட்டின் தேசிய மலர் மற்றும் மரம் கொன்றையாகும்.

கோடையின் வறட்சியிலும் வளரக்கூடிய ஆற்றல் கொண்டது சரக்கொன்றை. கொன்றை மரமானது மஞ்சள் நிறத்தில் சரம் சரமாகப் பூத்துக் குலுங்கும். கொன்றை பூச்சரங்கள் பொன்னிறமாக மின்னும். இதனால் இதற்கு ‘சொர்ண புஷ்பம்’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

கொன்றை மலரானது சங்க காலத்தில் முல்லை நிலத்திற்குரிய பூவாகக் கருதப்பட்டது. ஐங்குறுநூறு, கொன்றைவேந்தன், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு முதலான சங்க இலக்கியங்களில் கொன்றை பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 மலர்களில் கொன்றை மலரை கபிலர், ‘தூங்கிணர் கொன்றை’ என்று குறிப்பிட்டுள்ளார். கொத்துக் கொத்தாக தொங்கும் கொன்றை என்பது இதன் பொருளாகும்.

மருத்துவ குணங்கள் பல நிறைந்த இந்த அபூர்வமான கொன்றை மரங்களை நாம் வீட்டிலும் வளர்க்கலாம்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT