Do you know who is Vinayaki?
Do you know who is Vinayaki? 
ஆன்மிகம்

விநாயகி யாரென்று தெரியுமா?

நான்சி மலர்

விநாயகரை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்கிய பின்தான் எந்த ஒரு செயலாக இருந்தாலுமே செய்யத் தொடங்குவோம். அப்போதுதான் நம் மனதில் நினைத்த காரியம் எந்தத் தடையுமின்றி நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால், விநாயகியை பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? விநாயகி எனும் பெண் வடிவில் காட்சி தரும் விநாய மூர்த்தத்தைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

விநாயகி என்பவர் யானை தலையுள்ள இந்து பெண் தெய்வம். இவரைப் பற்றி பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. இவரைப் பற்றிய குறைந்த தகவல்களும், சிலைகளுமே உள்ளன. விநாயகிக்கு சிலை இருந்தால் கண்டிப்பாக அதற்கு பின் கதையும் காரணமும் இருக்கும் என்று தேடினால் அவரைப் பற்றிய பெரிதாக தகவல் இல்லை. பிள்ளையாரை நம்முடைய இஷ்டப்படி எப்படி வேண்டுமோ வழிபடலாம் என்பது மக்களின் எண்ணமாக இருந்தது. அதுவும் கி.பி. 6ம் நூற்றாண்டிற்கு பிறகு தான். அதற்கு முன் நம்பிக்கை இருந்தது, ஆனால் உருவ வழிபாடு கிடையாது. யானை தலையினை கொண்டிருப்பதால், விநாயகருடன் இவரை சம்பந்தப்படுத்தி பேசுவதுண்டு.

ஸ்ரீ கணேசா, வைநாயகி, கஜனனா, விக்னேஷ்வரி, கணேசானி என்று பல பெயர்களில் இவரை அழைக்கிறார்கள். விநாயகி சில நேரங்களில் 64 யோகினி தெய்வங்களுடன் இருக்கிறார். ஜெயின் மற்றும் புத்தத்தில் விநாயகியை ஒரு தனி தெய்வமாகவே குறிப்பிடுகிறார்கள். புத்த மதத்தில் விநாகியை 'கணபதி ஹிரிதயா’ என்று அழைக்கிறார்கள். அதாவது கணபதியின் இதயம் என்று பொருள்.

முதலாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விநாயகியின் சிலை ராஜஸ்தானில் உள்ளது. அதன் பிறகு 10ம் நூற்றாண்டிலிருந்தே விநாயகியின் சிலை கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பிரபலமான விநாயகியின் சிலை மத்திய பிரதேசத்தில் உள்ள சௌசாத் யோகினி கோயிலில் அமைந்துள்ளது.

மச்ச புராணத்தில் விநாயகியை பற்றி கூறப்பட்டிருக்கிறது. சிவபெருமான் அரக்கனை வதம் செய்யவே விநாயகியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. ஹரிவம்சா, வாயு மற்றும் ஸ்காந்த புராணங்களிலும் விநாயகியை பற்றிய குறிப்புகள் உள்ளன.

எல்லா தொடக்கங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடிய விநாயகப் பெருமான் ஏற்ற பெண் வடிவம்தான் விநாயகி என்றும் கூறுகிறார்கள். விநாயகருக்கு பல்வேறு வடிவங்கள் இருப்பதாக விநாயக புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி விநாயகர் ஏற்ற பெண் வடிவம்தான் விநாயகி. தமிழ்நாட்டில் சொல்லுமளவிற்கு விநாயகிக்கு தனி சன்னிதியில்லை என்றாலும் கோயில் தூண்களில் விநாயகியை காண முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகம்மன் திருக்கோயிலில் வீணை வாசித்தப்படி இருக்கும் விநாயகியை காணலாம். அதேபோல சுசீந்திரத்தில் உள்ள தாணுமலையான் கோயிலில் விநாயகியின் சிற்பத்தை காண முடிகிறது. மதுரைக்கு பெயர் போன மீனாட்சியம்மன் கோயிலில் ‘விநாயகதாரணி’ என்ற பெயரில் பெண் உருவிலான விநாயகியை காண முடிகிறது. இவரின் கால் புலிக்கால் போல அமைக்கப்பட்டுள்ளதால் ‘வியாக்ரபாத்தா விநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

களத்திர தோஷம், திருமணத்தில் உள்ள தடை, காரியத்தில் ஏற்படும் தடை ஆகியவை நீங்க வேண்டும் என்றால் மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகிக்கு சந்தனக்காப்பிட்டு வழிபட்டால் அனைத்து தடைகளும் விலகும் என்று நம்பப்படுகிறது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT