Protect kidney health Sirukanpeelai mooligai
Protect kidney health Sirukanpeelai mooligai 
ஆரோக்கியம்

சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காக்கும் சிறுகண்பீளை மூலிகை!

பொ.பாலாஜிகணேஷ்

ற்காலத்தில் வயது வித்தியாசமின்றி சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்று என சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகள் பலவும் அதிகரித்து வருகின்றன. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் சரியான நேரத்தில் தேவையான நீர் அருந்தாமல் இருப்பதுதான். வேலையில் கவனம் செலுத்தி விட்டு சிறுநீர் கழிக்க வேண்டிய நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைப்பது மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் விரைவு உணவுகள் பெரும்பாலானவை சிறுநீரகத்துக்கு எதிராகவே அமைகின்றன. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் ஒரே தீர்வாக இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் ஒரு அற்புத மூலிகைதான் சிறுகண்பீளை. இது சர்வ சாதாரணமாக நம் தோட்டங்களில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.

சிறுகண்பீளை முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இது சிறுநீரைப் பெருக்கும். பாண்டு, இரத்தச்சூடு (சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

சிறுகண்பீளை வேரை உட்கொண்டால் சிலவகை பாம்புக்கடி விஷம் மற்றும் வெறிநாய்க்கடி விஷம் கூட குணமாவதாக நாட்டு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மூலிகைக்கு சிறுநீரகக் கற்களை கரைக்கும் தன்மை உள்ளதென தற்போதைய உயர்நிலை ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறுகண்பீளை என்பது சிறு செடி ஆகும். இதன் இலைகள், மாற்றடுக்கில் அமைந்தவை. சிறுகண்பீளை பூக்கள் மிகவும் சிறியவை, வெண்மையானவை, கொத்தானவை, இலைக் காம்புகளின் அருகில் அமைந்தவை. நிமிர்ந்து வளரும் தன்மையுடனோ தரையில் படர்ந்த வகையிலோ வளரும் தன்மையுடன் காணப்படும்.

சிறுகண்பீளை செடிக்கு கற்பேதி, பொங்கல்பூ, சிறுபீளை என பல பெயர்கள் உண்டு. தமிழகம் எங்கும் பயிரிடாத நிலங்கள், வேலிகள், ஏரிகள், குளக்கரைகள் மற்றும் தரிசு நிலங்களில் இயற்கையாக இது வளர்கின்றது. இந்த முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது.

சிறுநீரகக் கற்கள் கரைய சிறுகண்பீளை முழுத்தாவரம் 50 கிராம், ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி, 100 மி.லி. அளவில், காலை, மாலை வேளைகளில் குடித்து வர வேண்டும். இப்படி இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்யலாம் அல்லது சிறுகண்பீளை முழுத்தாவரம் 50 கிராம், சிறு நெருஞ்சில், மாவிலங்க வேர், பேராமுட்டி வேர் சேர்த்து மொத்தம் 50 கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டு, 200 மி.லி.யாகச் சுண்டக்காய்ச்சி, 100 மி.லி.வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குடித்து வர வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்யலாம்.

சிறுநீரக எரிச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்று ஆகியவற்றுக்கு. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சிறுகண்பீளை கொடியை வாங்கி காலை, மாலை இருவேளையும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீரில் கலக்கி குடித்து விட்டால் இரண்டு நாட்களில் நல்ல பலன் தெரியும். மேற்கண்ட சிகிச்சைகளை ஒரு சித்த மருத்துவரின் அறிவுரையின் படி செய்வது மிகவும் அவசியம்.

இனி, வீட்டுத் தோட்டங்களில் சிறுகண்பீளை செடியை கண்டால் விடாதீர்கள். ஒரு அற்புதமான மூலிகை இது.

கருப்பு வெள்ளை சிந்தனை ஏற்படுத்தும் விளைவுகள் தெரியுமா?

ஒரு நாள் முழுக்க நிலையான ஆற்றலை நம்மிடம் தக்க வைக்க முடியுமா?

தசாங்க பொடியின் பயன்கள் என்னென்ன? தெரிஞ்சிக்கலாம் வாங்க!

கோயில் கோபுரக் கலசங்களில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

சல்மான் கானுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா! எந்த படத்தில் தெரியுமா?

SCROLL FOR NEXT