
வீட்டின் சமையலறையில் காய்கறி வெட்டுவதற்கென்று பழுப்பு நிறத்திலான வெட்டுப் பலகை (Chopping Board) ஒன்றைப் பெரும்பாலானோர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மிகப்பெரிய உணவகங்களிலும், வசதியுடையவர்களின் வீடுகளிலும் மஞ்சள், சிவப்பு, நீலம், பழுப்பு, பச்சை, வெள்ளை என்று ஆறு நிற வெட்டுப் பலகைகள் (நறுக்குப் பலகைகள்) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உணவுப் பொருட்களை ஆறு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும், ஒவ்வொரு நிறத்திலான வெட்டுப் பலகை பயன்படுத்தப்படுகிறது. உணவு தயாரிக்கும்போது, மாசுபாட்டின் அபாயத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் வெட்டுப் பலகைகளின் நிறக் குறியீடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உலகளாவிய நிலையில் இந்த நிறக் குறியீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிறப் பலகையின் நோக்கத்தையும், ஒரே பார்வையில் வேறுபடுத்தி எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. இது வணிகச் சமையலறைகளில் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், அயல் மாசுபாட்டின் (Cross Contamination) அபாயத்தையும் குறைக்கிறது.
சமையலறையினை உணவுப் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பை (Food Safety Management System - FSMS) உருவாக்க விரும்புபவர்கள் இந்த ஆறு நிறக் குறியீட்டு வெட்டுப் பலகைகளைப் பயன்படுத்தலாம். மேலும், இது ஆபத்துப் பகுப்பாய்வு மற்றும் முக்கியமான கட்டுப்பாட்டுப் புள்ளிகள் (Hazard Analysis and Critical Control Points - HACCP) நடைமுறைகளின் கொள்கைகளின்படி இருப்பது சிறப்பு.
வெட்டுப் பலகைகளை நம் விருப்பங்களுக்கேற்ற நிறங்களில் வைத்துக் கொள்ளலாம் என்கிறபோதும், அவற்றை நாம் தேர்வு செய்த உணவுப் பிரிவுக்கு ஏற்ற பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இதில் அவ்வப்போது செய்யப்படும் மாற்றம் உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகளாவிய நிலையில், ஆபத்துப் பகுப்பாய்வு மற்றும் முக்கியமான கட்டுப்பாட்டுப் புள்ளிகள் (HACCP), ஆறு நிறங்களிலான வெட்டுப் பலகை ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு பிரிவு உணவுப் பொருட்களின் குழுக்களைப் பரிந்துரைக்கின்றன. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. மஞ்சள் நிற நறுக்குப் பலகை: மஞ்சள் நிற நறுக்குப் பலகை சமைத்த இறைச்சிக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. சமைத்த மற்றும் பச்சையான இறைச்சிக்கு ஒரே நறுக்கு பலகையைப் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இது உணவில் அயல் மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். பச்சையான இறைச்சியைப் போன்று, சமைத்த இறைச்சிகளில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருக்காது என்றாலும், சமைத்த இறைச்சி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட எந்த நறுக்குப் பலகைகளையும் சூடான சோப்பு நீரில் கழுவிக் காய வைத்திட வேண்டும். இயலுமெனில் வெயிலில் காய வைக்கலாம்.
2. சிவப்பு நிற நறுக்குப் பலகை: சிவப்பு நிற நறுக்குப் பலகை பச்சை இறைச்சி மற்றும் கோழி இறைச்சிக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சை இறைச்சி மற்றும் கோழி இறைச்சியைத் தயார் செய்தால், சிவப்பு நிற நறுக்கு பலகையைப் பயன்படுத்துவது நல்லது. பச்சை இறைச்சியில் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதால், இது ஆபத்துள்ள உணவாகும். பச்சை இறைச்சிக்கு தனி நறுக்குப் பலகையைப் பயன்படுத்துவது அயல் மாசுபாடு மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கு முக்கியமாகும். பச்சை இறைச்சி நறுக்கும் பலகையினைப் பயன்படுத்திய பிறகு, சூடான சோப்பு நீரில் கழுவிச் சுத்தம் செய்து காய வைத்திட வேண்டும். இயலுமெனில் வெயிலில் காய வைக்கலாம்.
3. நீல நிற நறுக்குப் பலகை: நீல நிற நறுக்குப் பலகை பச்சை மீன் மற்றும் சிப்பி மீன்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பலருக்கு சில மீன் வகை உணவுகளுக்கு ஒவ்வாமை இருப்பதால், அயல் மாசுபாடு ஏற்பட்டுவிடுகின்றன. இந்தத் தயாரிப்புப் பகுதிகளைத் தனித்தனியாக வைத்திருப்பது முக்கியம். மீன் இறைச்சி நறுக்குப் பலகையினைப் பயன்படுத்திய பின்னர், சூடான சோப்பு நீரில் கழுவிச் சுத்தம் செய்து காய வைத்திட வேண்டும். இயலுமெனில் வெயிலில் காய வைக்கலாம்.
4. பழுப்பு நிற நறுக்குப் பலகைள்: பழுப்பு நிற நறுக்குப் பலகை காய்கறிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கழுவப்படாத வேர்க் காய்கறிகளில் அழுக்கு இருக்கலாம் என்பதால் இந்நிறம் பயன்படுத்தப்படுகிறது. நறுக்குப் பலகையினைப் பயன்படுத்திய பின்னர், சூடான சோப்பு நீரில் கழுவிச் சுத்தம் செய்து காய வைத்திட வேண்டும்.
5. பச்சை நிற நறுக்குப் பலகை: பச்சை நிற நறுக்குப் பலகை கழுவப்பட்ட சாலட் காய்கறிகள், மூலிகைகள் மற்றும் பழங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, தக்காளி, மல்லித்தழை, முலாம்பழம், ஆப்பிள் போன்றவற்றை நறுக்க இப்பலகையினைப் பயன்படுத்தலாம். நறுக்குப் பலகையினைப் பயன்படுத்திய பின்னர், சூடான சோப்பு நீரில் கழுவிச் சுத்தம் செய்து காய வைத்திட வேண்டும்.
6. வெள்ளை நிற நறுக்குப் பலகை: வெள்ளை நிற நறுக்குப் பலகைகள் பொதுவாக அடுமனை (Bakery) தயாரிப்புகள், ரொட்டி அல்லது பாலாடைக்கட்டி உள்ளிட்ட பால் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பால் பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என்பதால், இந்தப் பலகைகளை வெந்நீர் மற்றும் சோப்புடன் கழுவுவது அவசியமாகிறது. இயலுமெனில் வெயிலில் காய வைக்கலாம்.
நம் விருப்பத்திற்கேற்றபடி நிறப் பலகைகளைத் தேர்வு செய்து பயன்படுத்துவதை விட, உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டு, பயன்படுத்தப்படும் உலகளாவிய நிறக் குறியீட்டு முறையைப் பின்பற்றுவதே சிறப்பு. இது கவனக் குறைவுடன் செயல்படுவதைத் தவிர்ப்பதுடன், உடல் நலப் பாதுகாப்பிற்கும் உதவியாக இருக்கும்.
வெட்டுப் பலகைகள் எளிதில் சுத்தம் செய்யக்கூடிய பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும். மேலும், அவை கத்திகளைச் சேதப்படுத்தவோ அல்லது மங்கச் செய்யவோ கூடாது. உதாரணமாக, கண்ணாடி மற்றும் அக்ரிலிக் உங்கள் கத்தியை மிக விரைவாக மங்கச் செய்யும். அதேசமயம், மரம் கூர்மையைத் தக்க வைத்துக் கொள்ளும். நெகிழியிலான வெட்டுப் பலகைகள் சிறப்பானது. மற்ற வகைகளை விட மலிவானது. இருப்பினும் நெகிழி வெட்டுப் பலகைகளில், பளபளப்பாகவோ அல்லது மென்மையாகவோ இல்லாத நெகிழி வகையைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஏனெனில், இது கத்தி நழுவி நறுக்குபவர்களுக்கு காயமேற்படுத்தக் கூடும்.
மர வெட்டுப் பலகையை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத்துகளை கத்தி போன்ற உலோகத்தைப் பயன்படுத்தி அகற்றி, பலகையை ஒரு பஞ்சு மற்றும் சூடான, சோப்பு நீரில் தேய்த்துக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். வெட்டுப் பலகையின் ஒரு புறத்தை மட்டுமே பயன்படுத்தியிருந்தாலும், பலகையின் இருபுறமும் கழுவிச் சுத்தம் செய்திட வேண்டும். வெட்டுப்பலகையினை சுத்தம் செய்த பின்பு செங்குத்தாக நிறுத்தி, அதிலிருக்கும் தண்ணீர் வடியச் செய்ய வேண்டும். இதன் மூலம் மரத்திலான வெட்டுப் பலகை சிதைவதைத் தடுக்க முடியும். அதோடு, முழுமையாகக் காற்றில் உலர விடவும் முடியும்.
நெகிழியிலான வெட்டுப் பலகைகளையும் இதேபோன்று கழுவ வேண்டும். நெகிழியிலான வெட்டுப் பலகையில் இருக்கும் பள்ளங்களில் பாக்டீரியாக்கள் வளர்ந்து பெருகி உடல் நலக் குறைவை ஏற்படுத்தக்கூடுமென்பதால், வெட்டுக்கள் அதிகமிருக்கும் நிலையில் அதனை மாற்றிவிடுவது நல்லது.