
யோகா என்றால் அலைபாயும் மனதை அலைய விடாமல் நேர்வழிப்படுத்தும் செயல் முறையாகும். நுற்றுக்கணக்கான யோகாசனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆசனமும் ஒவ்வொரு நன்மையை வழங்கக்கூடியதாகும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு யோகாசனமும் ஒவ்வொரு விதமான செயல்முறையைக் கொண்டிருக்கும்.
பத்மாசனம் ஒரு சக்திவாய்ந்த யோகா பயிற்சியாகும். பத்மாசனம் செய்யும் போது கால்களின் வடிவம் தாமரை போன்ற தோற்றத்தை அளிப்பதால், கமலாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. தியானம், பிராணாயாமம், மூச்சு பயிற்சி போன்ற தியான பயிற்சிகள் செய்ய பத்மாசனத்தில் தான் அமர வேண்டும் என்பதால் இந்த ஆசனத்தின் முக்கியத்துவம் என்னவென்று நீங்களே அறிந்து கொள்ளலாம். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக நீங்கள் செய்யக்கூடிய எளிய யோகா ஆசனம் பத்மாசனம்.
இருப்பதிலேயே பத்மாசனம் என்ற யோகா பயிற்சி தான் மிகவும் எளிமையானது என்பதால் முதன் முதலாக யோகாசனம் செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு இந்த ஆசனம் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதான் ஆரம்பநிலை ஆசனம் என்பதால் இந்த ஆசனம் செய்ய பழகிவிட்டால் மற்ற ஆசனங்களை படிப்படியாக செய்ய முடியும். இந்த ஆசனம் செய்ய 10 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.
இந்த ஆசனம் செய்முறை எளிமையாக இருந்தாலும் பலன்கள் ஏராளம். இன்று இந்த பத்மாசனம் செய்வது எப்படி என்பது பற்றியும் இந்த ஆசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் அறிந்து கொள்ளலாம்.
பயன்கள்
* இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சீராகி மலச்சிக்கல் பிரச்சனைகள் படிப்படியாக குணமாகும்.
* பத்மாசனம் செய்யும் போது கால் முட்டியை மடக்கி இடுப்பு பகுதிக்கு அழுத்தம் கொடுப்பதால் அடிவயிறு மற்றும் இடுப்பெலும்பிற்கு வலிமை கிடைக்கிறது. மேலும் இடுப்பு மற்றும் கால் பகுதிகள் நன்கு இழுக்கப்படுவதால், சதை இறுக்கங்கள் நீங்குகின்றன.
* இடுப்பு தசைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் பிரசவத்தை எளிதாக்க உதவும்.
* பத்மாசனம் செய்யும் போது, முதுகு வளையாமல் நேராக அமர்ந்து செய்வதால், அது முதுகுத்தண்டுவடத்திற்கு நல்ல உடற்பயிற்சியாக அமைந்து, முதுகுத்தண்டுவடத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் போது முதுகு வலி படிப்படியாக குறைவதை கண்கூடாக அனுபவிக்கலாம். முதுமையில் முதுகு வலி வராமல் இருக்க இளமையிலேயே பத்மாசனம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* பத்மாசனம் உயர் இரத்த அழுத்தம், சுவாச பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது.
* சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தை தூண்டவும் உதவுகிறது.
* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, அதிக ரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிரந்தர நிவாரணம் கிடைக்க பத்மாசனம் செய்து வரலாம்.
* கூன் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
செய்முறை
விரிப்பில் அமர்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் நேராக நீட்டிக்கொண்டு நிமிர்ந்த நிலையில் (கூன் போடாமல்) அமர வேண்டும். வலது காலை கைகளின் உதவியுடன் தூக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்க வேண்டும். பின்னர் அதேபோல் இடது காலை தூக்கி வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்க வேண்டும். சிலருக்கு ஆரம்பத்தில் படத்தில் உள்ளபடி வயிற்றை தொடும்படி காலை வைக்க கடினமாக இருக்கும். தொடர்ந்து இந்த ஆசனத்தை செய்து வரும் போது நன்றாக வர ஆரம்பிக்கும்.
பின்னர் முதுகுதண்டை நேராக வைத்தபடி அமர்ந்து, கண்களை மூட வேண்டும். கைகள் இரண்டையும் முட்டிகளின் மீது, சின் முத்திரையில் வைத்து 3 நிமிடங்கள் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும். அதன் பிறகு கால்களை மாற்றி மற்றொரு பக்கமும் செய்ய வேண்டும். இது தான் ஒரு செட். இவ்வாறு 3 முறை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
சின் முத்திரை என்பது உள்ளங்கை மேல் நோக்கி பார்த்தவாறு, கட்டை விரல், ஆள்காட்டி விரலைத் தொட்டுக் கொண்டும் மற்ற 3 விரல்கள் நீட்டியபடியும் இருப்பதாகும்.
எச்சரிக்கை : சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இந்த ஆசனத்தை செய்யலாம். ஆனால் முதுகுதண்டு, கால் மூட்டிகளில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. முழங்கால் அல்லது கணுக்கால் காயங்கள் உள்ள நபர்கள் பத்மாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.