

3 Tamil short stories
1. இதோ… எந்தன் தெய்வம் முன்னாலே… !
"பெரியவங்க நாங்க பேச வேண்டியதெல்லாம் பேசியாச்சு…! இனி, நீங்க ரெண்டுபேரும் உங்களுக்குள்ள எதாவது பேசணும்னு நெனைச்சா போய் பேசுங்க!.. கல்யாணம் பண்ணிட்டு வாழப்போறவங்க நீங்க…!"
பெரியவர்கள் சொல்ல, இரண்டு பேரும் மெல்ல எழுந்தார்கள்.!
"பின்னாடி பூந்தோட்டம் இருக்கு! உக்கார சிமிண்டு பென்ச்சும் இருக்கு! போய் உட்கார்ந்து நிம்மதியா மனம் விட்டுப் பேசுங்க..!"
தாய் மாமா ‘பர்மிஷன்’ கொடுக்க, பேசப் போனார்கள்.
நாளைக்குக் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறவர்கள்.
நாளைக்குன்னா…?? நாளைக்கே அல்ல..! எதிர்காலத்தில் என்ற பொருளில் சொன்னது அது!.
பின்பக்கமாகப் பேசப் போனவர்கள், பத்து நிமிடங்கள் கழித்து கூப்பிட்டு அனுப்பியதும்தான் திரும்பி வந்தார்கள்!.
"என்ன மனசுவிட்டுப் பேசிட்டீங்களா?! அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாங்க போகலாம்ல…?!" கேட்டார் தாய் மாமா.
பெண் முகத்தில் பரவசம், பூரிப்பு மிளிர்வதைக் கண்டார்கள் பெரியவர்கள்!
"ஹூம்! புரியுது..! பெண்ணுக்கும் பையனையனுக்கும் ஒருத்தர்க்கு ஒருத்தர் பிடிச்சுப் போச்சுன்னு நெனைக்கிறேன்! மேற்கொண்டு நாம உட்கார்ந்து பேசலாம்ல?" கேட்டார் தாய்மாமன்.
பெண்ணைப் பார்த்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான் மாப்பிள்ளைப் பையன். அவன் அம்மாதான் கேட்டாள், "நீ என்னடா இப்படிப் பட்டிககாடா வளர்ந்திருக்கே..? பொண்ணுட்ட போய்ப் பேசுன்னா… இப்படியாடா கூச்சப் படுவாங்க!" என்றாள் பையனின் அம்மா.
ஆமாம். பூந்தோட்டத்தில் போய் உட்கார்ததிலிருந்து, பொண்ணுகிட்ட பையன் பேசவே இல்லை. நாணினான். அவள் தான் ரொம்ப நேரம் பேசினாள்.
பக்கத்தில் காரில் அமர்ந்திருந்த தாய் மாமன்கிட்ட பொண்ணு சொன்னாள், "நான், நகரத்துக்குப் போய் காலேஜுல படிச்சதுனால, என்னால அவரோட ஃபிரீயா பேசமுடியுது! ஆனா.. அவர் கிராமத்துலேயே இருக்கறதுனால படிச்சும் என்னை மாதிரி இயல்பா இருக்க முடியலை!" சொல்லிச் சிரித்தாள்.
"அப்போ பையனைப் பிடிக்கலையா?" அமர்ந்திருந்தவர்களில் யாரோ கேட்க,
"அதான்.. 'அவர்.. இவர்னு’ மரியாதை தாண்டவமாடுதே…?! அதிலேயே தெரிஞ்சுக்க வேண்டாம்... பொண்ணோட விருப்பத்தை?" என்று தாய்மாமா சொல்லவும்,
"அதிகம் கூச்சப்படற ஆம்பளை கிடைக்க குடுத்து வச்சிருக்கணுமே..," மனசுக்குள் நினைத்தபடியே பெண் மாப்பிள்ளை போட்டோவை எடுத்துப் பார்க்கவும், காரில் ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…!’ பாட்டு ஒலிக்கவும் சரியாய் இருந்தது! எல்லாரும் சிரிக்க, பொண்ணும் உடன்சேர்ந்து சிரித்தாள்.
2. நான்… உன்னை அழைக்கவில்லை…!
அது ஒரு சின்ன ஐடி கம்பெனிதான் என்றாலும், அதிலும் ஆண்களும் பெண்களுமாய் அனேகர் வேலை செய்தார்கள். அங்கே புதிதாய் வேலைக்குச் சேர்ந்தான் குமார்.
பார்க்க சுருள் முடி, நடுத்தர உடல்வாகு, சிவப்பு நிறமென சினிமா ஸ்டார் மாதிரி இருந்தான். அவன் மேல் அங்கிருக்கும் எல்லாருக்கும் ஒரு கண் அதிலும் குறிப்பாக, அனிதாவுக்கு ஒரு ஈர்ப்பு!
ஒருநாள் குமார் கேண்டினில் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு வீடியோ கால்…
"ஹாய்..! யூ ஆர் சோ ஹான்ட்சம்.!. உன்னோடு தனியாப் பேச விருப்பம்... சம்மதமென்றால் சொல்!" போன் கால் துண்டிக்கப்பட்டது.
யார் அது? கம்பெனியில் இல்லாத முகமாய் இருக்கிறதே! யாராய் இருக்கும்?! யோசித்தபடி வந்து சீட்டில் அமர, டொபுக்குனு ஒரு மெயில் சிஸ்டத்தில் வந்து விழுந்தது.
அதிலும் கன்னா பின்னான்னு… செய்திகள்..! குழம்பினான். பதில் அனுப்பினான். "யார் நீ? நேரில் பேச வா!" மெயில் அனுப்பினால் ஒரு ஐந்து நிமிடத்தில் பதில். "இது ஆட்டோமேட்டட் சிஸ்டம்!". இதையே தங்கள் மெயில் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான சான்றாகக் கொள்ளவும் என்று.
நேரில் பேசாமல் கொல்கிறாள்…. மெயில் அனுப்பினால் மெயில் போகிறது பதில்தான் வருவதில்லை… யாராய் இருக்கும் ஒரே குழப்பம்... ஆறு மாதமாய்.
ஒருநாள் ‘லோகல்’ டிரெயினில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் அதே வீடியோ கால் படியில் நின்றபடி பயணித்துக் கொண்டிருந்தான்.
ரயிலில் கூட்டம் பிதுங்கி வழிந்தது. "ஹேய்! எட்டித் தான் பாரேன்! நான் உன்னை அழைக்கவில்லை..! உன் உயிரை அழைக்கிறேன்…?!" போன் கட்டானது.
பயணித்தபடி எட்டி ரெண்டு பக்கமும் பார்க்க, யாரும் தெரியவில்லை.. அன்று நிறைய பெண்கள் கூட படியில் நின்றபடிதான் பயணித்துக் கொண்டிருந்தார்கள். 'அவர்களில் யார்? யாராய் இருக்கும்?' என்று சிந்தித்தவன், வண்டியோட்டத்தில் நெருங்கி வரும் ‘சிக்னல் போஸ்ட்’ மிக ஒட்டிவருவதைக் கவனிக்கத் தவறி, தலையை நீட்டி ஆளைக் கண்டுபிடிக்க எத்தணிக்கையில் ‘டொம்!’ என்ற சப்தத்தோடு பிடிநழுவி விழ்ந்து டிராக்கில் தலை சிதைந்து கொண்டிருந்தான் குமார்.
AI தொழில் நுட்பத்தால் நண்பர்களுக்குள் கலாய்க்கச் செய்த காதல் விளையாட்டில் குமார் காலனுக்குப் பலியானதுதான் மிச்சம்!!.
இது A -1 காதலா? AI காதலா? AI முறையில் பெண்பேசுவதாக புரோகராம் செய்து எவரோ அனுப்ப, அது புதிதாய் வேலைக்குச் சேர்ந்த குமாருக்குப் புரியாது போனதுதான் கொடுமை!.
ஒன்று மட்டும் உறுதியானது 'நான் உன்னை அழைக்கவில்லை.. ‘என்’ உயிரை அழைக்கிறேன் என்று பாடாமல்…, ‘உன்’ உயிரை அழைக்கிறேன்' என்று பாடிய அப்போதாவது அவன் விழித்திருக்கலாம்…..! என்ன செய்வது?
******
3. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.. கிருஷ்ணா!
அந்த ‘பார்க்கில்’ தினமும் வாக்கிங் போவது தினேஷுக்கு வழக்கம். அங்கே பலபேர் அதே நேரத்தில் வாக்கிங் வருவது வழக்கம். ஒருநாள் வாக்கிங் முடிந்து திரும்ப நினைக்கையில், இரண்டு பேரின் பேச்சு ஈர்க்க, 'என்ன பேசுகிறார்கள்?' என்று நின்று கவனித்தான்.
"சார் எனக்கொரு ஆசை! இந்த பார்க்கிலிருக்கும் ‘கூழாங்கல் வேய்ந்த அந்த ‘எட்டு’ மாடலில் அக்குபிரஷருக்காக நடக்கப் போடப்பட்ட நடை மேடை கூழாங்கல்லெல்லாம் பேந்திருக்கு…! அதையெல்லாம் எடுத்துட்டு, டவுன்ல ஒரு பார்க்கில வேய்ஞ்சிருக்கா மாதிரி பண்ணனும்சார்!" என்றார் இரண்டு பேரில் ஒருவரான சரவணன். கேட்டுக்கொண்டிருந்த ராஜ் குமார்.. "அதெல்லாம் சரி சார்… ! அதுக்கு எவ்வளவு செலவாகும்னு தெரியுமா?" என்று கேட்டார்.
"என்ன செலவானா என்ன சார்? ‘தீபாவளி போனஸ்’ வருதில்ல..?! அதில ஒரு பங்கைத் தர்ம காரியத்துக்குப் பயன்படுத்தலாம்னு இருக்கேன்.! என்ன செலவாகும்னு விசாரிச்சுச் சொல்லுங்க, செஞ்ச்சுடலாம்!" என்றார் சரவணன்.
இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கையில் இடையில் நுழைந்தான் தினேஷ்.. "சார் உங்களில் யாருக்கு ஜீபே வசதி இருக்கு சொல்லுங்க... நீங்க செய்யப்போற நல்ல காரியத்துக்கு நான் என் பங்கா ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பறேன்!." என்று சொல்லி, காத்திருக்க…
"நீங்க எதுக்கு சார் அனுப்பணும்?" என்றார் சரவணன்.
"சரவணன் சார், நீங்க மட்டும் ஏன் எட்டு போட்டிருக்கும் இந்த வாக்கிங்க் தளத்தை சீர் செய்யணும்னு நினைக்கிறீங்க?! எதோ, ஒரு பொது நலத்துக்குத்தானே?!"
"ஆமாம்… நாலு பேருக்கு பயன் படட்டுமேன்னுதான்." என்றார் சரவணன்.
"நீங்க எதோ கம்பெனில வேலை பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். இந்த வயசுலயே பொது நலத்துக்காக, தீபாவளி போனஸில் ஒரு பகுதியைச் செலவு செய்ய நீங்க, நினைக்கையில், ‘ரிட்டையர்டு மனுஷன்’ நான் ஏன் செய்யக் கூடாது? சொல்லுங்க!" என்று செல்லை எடுத்த தினேஷ்,
"யாரும் எதைக் கேட்டாலும் அதைக் கொடுப்பவன்தான் கிருஷ்ணன்! நான், கேட்காமலே கொடுக்கிறேன்!" என்றான்.
"எல்லாருக்கும் வாழ்க்கை உண்டு. வரலாறு…? ஆனால், இதுமாதிரி தான் வாழுகிற காலத்தில், வாழுகிற சமுதாயத்துக்காக, அதை ஒரு படி உயர்த்தப் பாடுபடுபவனுக்கு வரலாறே உண்டு இல்லையா?" என்று ராஜ்குமார் கேட்க, அந்த வாக்கிங்க் சூழல் வஸந்தமானது அன்று!