1. விவேகானந்தரும் விவேகமும்!
இந்து மதத்தின் உன்னதக் கோட்பாடுகளை உலகறியச் செய்த பெருமைக்கு என்றும் உரியவர், நம் விவேகானந்தர்!அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் 27 வரை நடைபெற்ற உலக மதங்களின் நாடாளுமன்றம் (Parliament of the World’s Religions) என்ற மதிப்பு வாய்ந்த கூட்டத் தொடரில், அவர் ஆற்றிய உரை, வரலாற்றின் பொன்னேட்டுப் பக்கங்களாக என்றும் மின்னுபவை!
மேலை நாட்டு ட்ரஸ் கோடைப் பின்பற்றி மற்றவர்கள் உடையணிந்து வந்து மேடையில் அமர்ந்திருந்தபோது, துறவிகளுக்கான எளிய அங்கி அணிந்து அமர்ந்திருந்த அவரின் மீது பார்வையாளர்களின் பார்வை அதிகமாகப் பதியவில்லையாம். கீழை நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஏதோ பேசப் போகிறார் என்று பார்வையாளர்கள் பலர் அலட்சியமாக இருக்க, சிலரோ சீட்டைக் காலி செய்யவும் ஆரம்பித்தார்களாம்.
மற்றவர்களெல்லாம் ‘சீமான்களே! சீமாட்டிகளே!’ என்று பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தரோ,
‘அமெரிக்கச் சகோதர சகோதரிகளே!’
என்று ஆரம்பித்து முதல் பாலிலேயே சிக்சர் அடிக்க, சீட்டைக் காலி செய்தவர்கள் அவசரம் அவசரமாகத் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்பினார்களாம்! அப்புறமென்ன? ரொனால்டோ, மெஸ்ஸி அடித்த அத்தனை பாலும் கோலாவதைப் போல, அவர் பேசிய அனைத்துமே உலகப் புகழ் பெற்றவை ஆயின!
சர்வத மத ஒற்றுமைக்கான அம்மாநாடு அனைத்து மதங்களின் சாராம்சம் அன்பு என்பதையும்,மத நல்லிணக்கமே உயிர்நாடி என்பதை உணர்த்துவதையுமே தனது முதன்மை இலக்காகக் கொண்டிருந்தது.
இந்து மதம் அவ்வாறானதே என்பதையும், எம்மதத்துடனும் இணக்கம் கொண்டது என்பதையும் அழுத்தந் திருத்தமாக அழகு ஆங்கிலத்தில் அவர் விளக்க,
கூட்டத்திலோ ‘பின் ட்ராப் சைலன்ஸ்’! நேரங்கடந்து பேசாமல் இருக்க மணியடிப்போரும், அவர் உரையில் ஆழ்ந்து, தங்கள் பணியை மறந்து விட்டார்களாம்!
உலகெங்கும் உள்ள மக்கள் இந்து மதத்தை மதிக்கவும், அதன் உயரிய கோட்பாடுகளை அறிந்து கொள்ளவும், யோகா கலையின் உன்னதத்தை உணர்ந்து கொள்ளவும் விவேகானந்தரின் அந்த மாநாட்டு உரைகளே அடித்தளமாக அமைந்தன.
ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தரின் சிறு வயதிலேயே அவரின் தன்மைகளைச் சரியாகக் கணித்து விட்டாராம். ஒரு நாள் தன் மாணவன் வரவில்லையென்றாலும், அவரைப் பார்க்கக் கிளம்பி விடுவாராம். மாணவரும், குருவைப் பார்க்காமல் ஒரு நாளும் இருக்க மாட்டாராம்.
ஒரு முறை விவேகானந்தரின் தாயார் நோய்வாய்ப்பட்டு விட, அவருக்கோ தன் மீதே வெறுப்பு வந்து விட்டதாம். தன் தாயைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று எண்ணி்! ஏதாவது வேலைக்குச் சென்றிருந்தால் பணம் கிடைத்திருக்குமென்றும் அதனைக் கொண்டு மருத்துவம் பார்த்திருக்கலாம் என்றும் அவர் ராமகிருஷ்ணரிடம் சத்தம் போட, ராமகிருஷ்ணரோ ‘நீ இன்னொரு தாயாகிய காளியை ஏனோ மறந்து விட்டாய். நாம் கோயிலில்தானே இருக்கிறோம்.
’தாயிடம் சென்று உன் கோரிக்கையைச் சொல்’ என்று உள்ளே அனுப்பினாராம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தவரிடம் ‘காளித் தாயிடம் உன் கோரிக்கையை முன் வைத்தாயா?’ என்று குரு கேட்க, ’இல்லையே! மறந்து விட்டேன்!’ என்றாராம்!’ மீண்டும் உள்ளே சென்று உன்னைப் பெற்ற தாய்க்கு என்ன வேண்டுமென்பதைக் காளித் தாயிடம் கேள்!’ என்று சொன்னாராம் குரு!
இரண்டு, மூன்று முறை உள்ளே சென்று காளித் தாயைப் பல மணி நேரம் தொழுதபோதும் அவர் தனக்கென எதையும் காளியிடம் கேட்கவே இல்லையாம்! இறையிடம் தனக்கென எதையும் கேட்கும் மனநிலை, தாய் நோய்வாய்ப்பட்டிருந்தபோது கூட அவருக்கு வரவில்லையாம்! என்னே அவரின் விவேகம்!
கடைசி முறை உள்ளேயிருந்து திரும்பியவரிடம் குரு கேட்டாராம்,
’இப்பொழுதாவது உன் கோரிக்கையைத் தாயிடம் தெரிவித்தாயா?’ என்று.
‘இல்லை!’ என்று சொல்லிய சிஷ்யனை அணைத்துக்கொண்ட குரு,’ அதுதானே பார்த்தேன்! அப்படி ஏதாவது நீ கேட்டிருந்தால், நம் உறவு இன்றோடு முடிந்திருக்கும்!’ என்று.
எப்பேர்ப்பட்ட குரு! எவ்வளவு தெளிந்த சிஷ்யன்!
இந்த இந்திய மண்தான் எத்தனை புனிதர்களை இந்த உலகுக்கு ஈந்திருக்கிறது?!
1902 ஜூலை நான்கில்தான் விவேகானந்தர் இந்தப் பூமித் தாயிடம் விடை பெற்ற நாள்!
அவரின் புனித நினைவு தினமான இந்நாளில் அவர் வழி நடப்பதாக உறுதி ஏற்போம்!
என்றும் அவர் நினைவுகளை மனதில் சுமப்போம்!
- ரெ.ஆத்மநாதன்
விவேகானந்தரின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் என்ற நூலில் இருந்து...
கண்ணன் கருணை
விவேகானந்தர் தாம் தரிசிக்க வேண்டிய தலங்கள் பல இருப்பதை எண்ணி காசியில் சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அயோத்தி சென்றடைந்தார். அயோத்தியின் புனிதத்தையும் ராமபிரானது அற்புத செயல்களையும் எண்ணி பரவசமடைந்தார்.
பின்னர் ஆக்ரா லக்ஷ்மணபுரி ஆகிய இடங்களையும் கண்டு மகிழ்ந்தார். சலவை கல்லில் அமைந்த தாஜ்மஹாலை கண்டு அதன் கலை அம்சத்தை வியந்தார். பின்னர் பிருந்தாவனம் போய் சேர்ந்தார். அவர் பிருந்தாவனம் போய் சேர்ந்தவுடன் அங்கு கண்ணபிரான் இளம்பருவத்தில் புரிந்த திருவிளையாடல்களெல்லாம் அவருடைய மனதிலே தெளிவாக தோன்றின.
அங்குள்ள கோவர்தனக்கிரியை ஒருநாள் வலமாக வந்தார். அவர் தேச சஞ்சாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு கடினமான விரதம் பூண்டிருந்தார். அதாவது எங்கும் எவரிடத்திலும் பிட்சை கேட்பதில்லை என்னும் விரதமாகும். ஆகையால் எவனாவது வலிய வந்து படைத்த பிட்சை அன்னத்தை அவர் ஏற்று வந்தார் அவ்வாறு அன்றைக்கு உணவு ஏதும் அவருக்கு கிடைக்கவில்லை.
வனத்தினுள் சென்று கொண்டிருந்த அவரை எவர் தான் தேடி வந்து உணவு அளிக்க முடியும்? விவேகானந்தர் அன்னத்தைப் பற்றியே சிறிதம் கவலை இல்லாதவராகி கண்ணபிரானை மட்டும் கருத்தில் கொண்டு கோவர்த்தனகிரியை வலம் வந்து கொண்டிருந்தார். அந்த நிலையில் அவருக்கு பசியும் களைப்பும் அதிகரித்துவிட்டன. அவற்றோடு சேர்ந்தால் போல மழையும் வந்து சோ என்று பெய்து அவரை முற்றும் நனைத்து விட்டது.
அப்போதும் கண்ணனை பற்றிய எண்ணம் தான் அவரது சிந்தையின் நிலையாக இருந்தது. அந்த நிலையில் அவரை அழைக்கின்ற குரல் ஒன்று பின்புறம் இருந்து திடீரென்று அவருடைய காதில் விழுந்தது. ஆனால் விவேகானந்தர் திரும்பி பார்க்காமலேயே விரைந்து சென்றார்.
அவரை கூவி அழைத்த அன்பன் அவருக்காக உணவு எடுத்து வந்திருப்பதாக சொல்லிக்கொண்டே நெடுந்தூரம் பின்தொடர்ந்து ஓடிச் சென்று அவரை அணுக, அதைக் கேட்ட விவேகானந்தர் இது தெய்வாதீனமோ என்று எண்ணி, மேலும் இதை ஆராய்ந்து அறிய வேண்டும் என்று எண்ணி விரைந்து ஓட ஆரம்பித்தார்.
அந்த மனிதனும் விடாமல் வெகு தூரம் பின்தொடர்ந்து ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி தான் கொண்டு வந்திருந்த உணவை ஏற்றுக் கொள்ளுமாறு பணிந்து வேண்டினான்.
சுவாமி விவேகானந்தரும் அந்த மனிதனது விருப்பத்திற்கு இணங்கி உணவு உட்கொண்டார். அவருடைய பசித்தீ அடங்கவே மனிதன் வனத்தினுள் சென்று மறைந்து விட்டான். உணவை உண்டு பசி தீர்ந்த விவேகானந்தர் காட்டில் உணவு கிடைத்த அற்புத நிகழ்ச்சியை எண்ணி எண்ணி கண்ணீர் மல்கியவரே கண்ணனது கருணையை புகழ்ந்து வாழ்த்தினார் .
(விவேகானந்தரின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் என்ற நூலில் இருந்து...)
ஆர் ஜெயலெட்சுமி