

மன்னர் தன் பாதுகாப்பு மந்திரியை அரசவைக்கு அழைத்தார்.
''மன்னரே! வணக்கம்! அழைத்தீர்கள்... காரணம் அறிய வேண்டுகிறேன்?''
''நம் பக்கத்துப் பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் முடிவடையப் போகிறது. உங்களுக்கு தெரியும் அல்லவா?''
''ஆம் மன்னா நன்றாகவே தெரியும்!''
''ஆனால், எனக்குக் கிடைத்த துப்புளவின்படி சுமார் 2 லட்சம் கடலோரப் படை காவலர்கள் மாயமாக மறைந்துவிட்டதாகத் தகவல் வருகிறதே? இதற்கான காரணத்தைக் கண்டறிந்தீர்களா? இதற்கு என்ன காரணம் என்பதை எனக்கு நாளை சபையில் அறிவிக்க வேண்டும். இதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய மிகப்பெரிய கடமையாக நான் கருதுகிறேன். உடனே அரசவையை நாளை கூட்டவும்.''
''ஆம் மன்னா அப்படியே செய்கிறேன்!'' அடுத்த நாள் அவ்வாறே 10 மணிக்கு அரசவை கூடியது.
அங்கே மந்திரிகள் உட்பட மற்ற சேனாதிபதிகள், போர்த் தளபதிகள், விவசாயம் மற்றும் நீர்ப் பாசனப் பிரதிநிதிகள், தவிர பொதுநல விரும்பிகள், வெகு ஜனங்களுடைய உறுப்பினர்கள் எல்லோரும் கூடி விவாதத்திற்காகக் காத்திருந்தனர்.
அப்போது மன்னர் "நம் நாடு மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்டு இருக்கிறது. ஒரு பக்கம் கடல் எல்லைகள் சுமார் 450 கிலோமீட்டர் இருக்கின்றன. அவற்றை 3 லட்சம் பேர் பாதுகாத்து வந்தனர்.
அதில் இரண்டு லட்சம் பேர் என்ன ஆனார்கள் என்பது பற்றி தன்னுடைய பாதுகாப்பு மந்திரியிடம் கேட்டேன்!? அவருக்குச் சரியான விளக்கம் தரமுடியவில்லை!
அதற்காக என்னுடைய அரசாங்க கவிஞர் 'அறிவு மதியை' இங்கே அழைத்து உங்களுக்கு நடந்ததைச் சொல்வேண்டும் என்பதற்காக அழைக்கிறேன். அரசு சார்பாக இப்பொழுது அறிவுமதி பேசுவார்'' என்றார்.
''பேரன்பும், பெரும் மதிப்பும் உடைய ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குலோத்துங்க, ஸ்ரீ ல ஸ்ரீ குபேர வர்மனின் இளைய புதல்வர் ராஜவர்மரின் ஆணைப்படி நான் கடந்த ஒரு வருடமாக மலைப்பகுதியில் பணிபுரியும் சுமார் 2 லட்சம் போர் வீரர்களைப் பிரித்து கடலோரப் பாதுகாப்பு பணியில் அமர்த்தினோம்.
கடந்த ஒரு வருடமாக அவர்கள் கடலோரங்களில் சவுக்கு மரங்களை வளர்த்து, பெரும் காடுகளாக மாற்றி உள்ளார்கள். அதனிடையே புதைக்குழிகளையும், பதுங்கு குழிகளையும் அமைத்து நம் நாட்டைக் காக்க பெரும் சேவை செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, இந்த ஒரு பெரிய பொறுப்பு எனக்கு வழங்கி என்னை கௌரவித்த என்னுடைய தெய்வத்திற்குக் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.''
பிறகு இன்னொரு ஆஸ்தான கவிஞரான ‘பிறை சூடன்’ 'தனக்கு உளவுத்துறையில் பணி வழங்கப்பட்டதையும், அதற்காக அவர்கள் இருவரும் புலவர்கள்போல எல்லா இடங்களையும் ஆய்வுசெய்து அதன்மூலம் பாதுகாப்பில் இருந்த மூன்று லட்சம் பேரில் 2 லட்சம் பேரைக் கடலோரப் பகுதிக்கு அனுப்பி எல்லா வேலைகளையும் முடித்ததையும்' எடுத்து உரைத்தார்.
ஆகவே, பொதுமக்களாகிய நீங்கள் கவலை இன்றி இருக்கலாம். இது நம்முடைய அரசுக்கும் அரசவைக்கும் கிடைத்த மாபெரும் ராஜதந்திரத்தினுடைய வெற்றி ஆகும்.
ஆகவே, இன்னும் 500 ஆண்டுகளுக்கு நம்முடைய கடல் மார்க்கமாக யாரும் நம் நாட்டைக் கைப்பற்றமுடியாது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று சூளுரைத்தார் பிறைசூடன்.
கடைசியாக அரசர் தனது உரையில்,
''மந்திரிகள் தங்களுடைய கடமையை மந்திரவாதி போன்று நினைத்துக்கொண்டு மன்னனைப் புகழ்ந்துகொண்டு இருப்பதிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே நான் இந்த அவையைக் கூட்டினேன்.
இந்நாள் முதல் என்னுடைய பாதுகாப்பு அமைச்சரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் நீக்கப்பட்டு அந்த இடத்திற்குச் சிறந்த பிரதிநிதியாக என்னுடைய ஆஸ்தான கவிஞர் அறிவு மதியையும் அவருக்கு உதவியாக பணிபுரிய உளவுத்துறை பிறைசூடனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை நீங்கள் இன்று பொதுமக்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.''
இவ்வாறாக தன் நல்லாட்சியை நன்றாக நடத்தி மக்களுக்கும், அவர்களுடைய குறையை உடனே கேட்டறிந்து, உடனுக்குஉடன் கலைந்து மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் மன்னருக்கு அவையில் நன்றி தெரிவிக்கப்பட்டது .
மேலும் புது செய்தியையும் வெளியிட்டார்;-
''அதாவது ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது நான்கு குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
அவற்றில் ஒரு குழந்தையை விவசாயத்திற்கும், ஒரு குழந்தையைப் போர் புரிவதற்கும், ஒரு குழந்தையை வெளிநாட்டு வணிகத்துக்கும், கடைசியாக உள்ள குழந்தையைப் பெற்றோர்களைப் பாதுகாக்கவும், சமுதாயத்தைப் பேணுவதுமாக இருந்து நம் தமிழ்ச் சமூகம் மேலும் மேலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இந்த அவை உறுதிப்படுத்தி பொதுமக்களிடம் கொண்டு செல்கிறது.''