

1. நிஜமான கனவு
அன்று காலையில் எழுந்ததும் மீராவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி... அவள் எழுதிய சிறுகதை வாரப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதுமல்லாமல் அட்டைப்படத்தில் அவள் கதை பெயருடன் முதல் பரிசு என்றும் குறிப்பிட்டப்பட்டு இருந்தது தான் காரணம்..
"அம்மா... நீ எழுதின கதை பத்திரிகையில் பப்ளிஷ் ஆகி இருக்காமே... பக்கத்து வீட்டு ஆன்டி கூப்பிட்டு உனக்கு வாழ்த்து சொல்ல சொன்னாங்க ... அம்மா... நிஜமாகவே நீ சாதிச்சிட்டே..." என்று மகன் கட்டிப் பிடித்து சொன்னதும் 'நிஜமா?' என்று பிரமித்து போய் இருக்கையில், மீராவின் கணவன் பத்திரிகையை வாங்கி வந்து அவள் கையில் கொடுத்து, "கங்கிராட்ஸ் மீரா... பெருமையா இருக்கு," என்று கை குலுக்கி வாழ்த்தியதும் மீரா அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
எத்தனை வருட கனவு?! தினம் கதை, கவிதை, கட்டுரை எழுதி கணவன் ஆபீஸ் போகும் போது "கொரியர் பண்ணிடுங்க" என்பாள்... வாரா வாரம் பத்திரிகை வாங்கி தன் படைப்புகள் வந்திருக்கிறதா என்று பார்த்து ஓய்ந்து போவாள்.. ஏமாற்றம் தான் மிச்சம்..
"அம்மா... ஹோட்டல் இல் சின்ன பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்கேன்... என் ப்ரண்ட்ஸ் சில பேர், அப்பா ஃப்ரெண்ட்ஸ் சில பேர் அப்படியே உன்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்யும் நான் இன்வைட் பண்ணி இருக்கேன்..."
"எதுக்குடா இதுக்கு போய் பார்ட்டி எல்லாம்?" என்ற அம்மாவிடம், "பின்னே அந்த பத்திரிகையில் உன் கதையை குறிப்பிட்டு அருமையாக எழுதி இருக்காங்கன்னு ஆசிரியரே சொல்லி இருக்கிறார்.. ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கி இருக்கே... கிளம்பு... அழகா ப்ரின்ஸஸ் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு வா.."
மறுக்க முடியாமல் கிளம்பினாள் மீரா!
ஹோட்டலில் எல்லாரும் வாழ்த்து கூறி சாப்பிட்டு கிளம்பும் போது தன் கணவனிடம், "ஒரு நிமிடம் எல்லோரையும் இருக்க சொல்ல முடியுமா? இரண்டு வார்த்தை பேசணும்," என்றதும் எல்லோரையும் அமரச் சொன்னார் மீராவின் கணவன்.
"நீங்க எல்லாரும் வாழ்த்தினதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்... எனக்கு ஏதோ எழுத வருமா வராதா என்று நினைத்து தான் எழுத ஆரம்பித்தேன்.
கணவனும் பையனும் கிளம்பியதும் வேலையை முடித்து விட்டு எழுதுவேன். எத்தனை வருடங்கள்... ஆனால் ஒரு முறை கூட என் கதையோ கட்டுரையோ கவிதையோ பிரசுரம் ஆனதில்லை... விரக்தியில் 'இனி எழுத மாட்டேன்; எனக்கு திறமையில்லை' என்று பேனாவையும் பேப்பரையையும் ஓரங்கட்டி வைத்த போதெல்லாம் என் கணவரும் மகனும் 'உன்னால் முடியும். நீ எழுது. தோல்வியை அனுபவமாக எடுத்துக் கொண்டு முயற்சி செய்து கொண்டே இரு. தளராதே.
வெற்றி நிச்சயம்,' என்ற வார்த்தைகளை மந்திரம் போல சொல்லி சொல்லி என்னை ஊக்குவித்ததால் மட்டுமே நான் தளராமல் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து இன்று சிறுகதை போட்டியில் முதல் பரிசு வாங்கி இருக்கிறேன். இந்த வெற்றி என் கணவரையும் மகனையும் தான் சேரும். உங்கள் வீட்டில் யாருக்காவது ஏதாவது திறமை இருந்தால் அதை கண்டுபிடித்து ஊக்குவிப்பு கொடுங்கள்..
ஊக்குவிக்கும் ஆள் இருந்தால்
ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்
என்ற வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது..." என்றதும் அனைவரின் கைதட்டல்களும் மீராவின் காதுகளில் 'வெற்றி வெற்றி' என்று கூறியது போல் இருந்தது.
2. கண்மணி:
"ஏன் புள்ளை... எந்நேரமும் இப்படியே உக்காந்துகிட்டு இருக்க? வேலைக்கு கிளம்பு. இன்னும் பத்து நாள்ல உனக்கு கல்யாணம். போ... போயி தலைக்கு தண்ணி ஊத்தி கிட்டு சாமி கும்பிடு... கஞ்சி வச்சிருக்கேன்... குடிச்சிட்டு சம்படத்தில உனக்கு பிடிச்ச தக்காளி சாதம் செஞ்சி வச்சிருக்கேன்... எடுத்துகிட்டு வேலைக்கு கிளம்பு ஆத்தா..."
பதிலே வராமல் இருக்க, முதுகில் ஒரு தட்டு தட்டி "என்ன புள்ள? கனவா கண்டுகிட்டு இருக்கே?"
கேட்டதும் வேலைக்கு போக மனசில்லாமல் எழுந்தாள் கண்மணி.
"இன்னிக்கு ரைஸ் மில்லில சீக்கிரம் வர சொன்னாக... நா வேலைக்கு கிளம்பறேன்," என்று கதவைத் திறந்த கண்மணியின் அம்மா, வாசலில் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தவரை பார்த்து "ஐயா சாமி..உள்ளே வாங்க.. உட்காருங்க கண்மணி மருமக புள்ளை வந்திருக்காக... காபி தண்ணீ கொண்டு வா ஆத்தா," என்றாள்.
"கண்மணிக்கு அப்பாவும் இல்ல... கல்யாணத்துக்கு புறவு நீங்க நம்ப வீட்லயே இருக்கலாம்..." சொன்ன மருமகனிடம்,
"கட்டிக் கொடுத்த வீட்டுக்கு ஒரு வேளை விருந்தாளியா தான் போகணும்னு சொல்வாக. நீங்க சொன்னதே சந்தோசம் தம்பி. இதோ டவுன் தானே. ஒரு பஸ்ஸ புடிச்சா வந்து பாத்துட்டு போறேன்..."
"இந்தாங்க.. இதில கண்மணிய ஒரு கையெழுத்து போட்டு தர சொல்லுங்க..."
"என்ன தம்பி இது?"
"இல்ல... கண்மணி ப்ளஸ் டூ வர தா படிச்சிருக்கா. காலேஜ் படிக்க ஆசைன்னு பேசையில தெரிஞ்சுகிட்டேன். வீட்டிலிருந்து காலேஜ் படிப்பு படிக்கட்டும். ஜவுளி கடையில் பில் போடற வேலைய விட்டுட்டு அந்த நேரத்தில படிக்கட்டும். படிச்சு முடிச்சா எனக்கு தெரிஞ்ச கம்பெனில வேல வாங்கி தந்துருவேன். கையெழுத்து போட்டு தர சொல்றீகளா?"
"தம்பி.. என் வூட்டுக்காரரும் இல்லாமா இந்த புள்ளைய எப்படி கரை சேக்க போறேன்னு நா கவலப்படாத நாளே இல்ல. நா கும்பிடற என் குலசாமி என்ன கைவிடல..."
கண்களில் இருந்து வந்து கண்ணீரை துடைத்து விட்டு, "கண்மணி குலசாமி படத்து முன்ன வச்சு கையெழுத்து போட்டு தம்பி கிட்ட கொடும்மா... மறுபடியும் சொல்லுதேன் தம்பி...
நீங்க நல்லா இருக்கணும்... படிப்புங்ற சொத்தை என் புள்ளைக்கு குடுத்தீட்டீங்க... நன்றி தம்பி," என்று கையெடுத்து கும்பிட்ட கண்மணியின் அம்மாவை பார்த்து, "என்னை படிக்க வச்சது என் பெரியப்பா. நானும் அப்பா இல்லாத புள்ளை. அந்த படிப்புனால தா இன்னிக்கு நல்ல வேலைல இருக்கேன். சரி கையெழுத்து போட்டு சீக்கிரம் கொடுக்க சொல்லுங்க. அத காலேஜ்ல கொடுத்துட்டு நா வேலைக்கு போகணும்," என்ற முருகேசனிடம் கண்களால் நன்றி சொன்னாள் கண்மணி.