
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா? அல்லது யோகா செய்யலாமா? என்ற சந்தேகம் வரும். மேலும் இதில் எதை தேர்வு செய்தால் விரைவில் உடல் எடை குறையும் என்ற எண்ணத்தில் மட்டுமே தேர்வு செய்வார்கள்.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கி விட்டனர் என்றே சொல்ல வேண்டும். உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி என மக்கள் உடல்ஆரோக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் இதன் பின்னால் ஓட ஆரம்பித்துவிட்டனர். அனைத்துமே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் உடற்பயிற்சி, யோகா மற்றும் நடைபயிற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
உடற்பயிற்சியை விட யோகாசனம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதாக நிறுபிக்கப்பட்டுள்ளது. யோகா முறைகளை முறையான ஆசிரியரிடம் பயின்றால் மட்டுமே யோகாசனத்தின் முழு பலனையும் பெற முடியும். அதேபோல் உடற்பயிற்சி செய்யும் போது டயட் மற்றும் உடலில் நீர்ச்சத்து இழக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
உடற்பயிற்சியை சரியான பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றால் மட்டுமே எந்த விதமான உடல் பிரச்சனைகளும் வராமல் தப்பிக்கலாம். உடற்பயிற்சி செய்யும் சிலர் ஆர்வக்கோளாறால் அதிக உடற்பயிற்சி செய்தால் விரைவில் ஸ்லிம்மாக, அழகாக மாறி விடலாம் என்ற கற்பனையில் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது போல் பெரும் ஆபத்தை வரவழைத்துக் கொள்கின்றனர். அதிக உடற்பயிற்சி ஆபத்தில் முடியும் என்பதை மறந்து விடுகின்றனர்.
உடற்பயிற்சியை அதிகமாக செய்தால் உள்காயம் அதிகம் ஏற்படும் மற்றும் உடலும் பாதிக்கப்படும். ஆனால் யோகாசனத்தை எந்தளவு அதிகமாக செய்கிறோமோ அந்தளவு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று யோகா வல்லூநர்கள் கூறுகின்றனர்.
நிறைய பேர் யோகாசனம் செய்வது மிகவும் கடினம் என்று நினைத்து அதை செய்ய தயங்குகின்றனர். ஆனால் யோகாசனம் ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும் போகப்போக பல நன்மைகளை வரிவழங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. மனத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் பல்வேறு நன்மைகளை தருவது யோகாசனம் ஆகும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யும் போது ஒரு மாதத்திலேயே உடல் எடை 3 முதல் 4 கிலோ வரை வேகமாக குறைவதை காண முடியும். அதனால் நிறைய பேர் யோகாவை விட உடற்பயிற்சியே சிறந்தது என்று நினைத்து உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் யோகா செய்யும் போது குறைந்தது 3 மாதத்திற்கு பிறகு தான் சற்று மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். நிதானமாகவே உடல் எடை குறைய ஆரம்பித்தாலும் நீடித்த பலன் கிடைப்பது உறுதி.
அதுவுமில்லாமல் யோகாசனம் மூலம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஒரு மாதத்தில் எடை குறைய வேண்டும் என்று அவசரப்படக்கூடாது. யோகாவில் பொறுமை மிகமிக அவசியம்.
ஆனால் நீங்கள் ஒரு வருடம் யோகாசனம் செய்து விட்டு, பின்னர் உங்களால் தொடர முடியாமல் போய்விட்டாலும் உங்கள் உடல் எடை அதிகரிக்காது. ஆனால் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தவர்கள் ஒரு வருடத்திற்கு பிறகு உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி விட்டால், நீங்கள் குறைத்ததை விட இரண்டு மடங்கு உடல் எடை அதிகரிக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. அதுமட்டுமில்லாமல் மீண்டும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைப்பது மிகவும் கஷ்டமாகும்.
யோகா, உடற்பயிற்சி எதுவாக இருந்தாலும் படிப்படியாக பயிற்சியை அதிகரித்தால் மட்டுமே நிரந்தர பலனை பெறமுடியும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் யோகா, உடற்பயிற்சி எதுவாக இருந்தாலும் சரியான முறையில் பயிற்சி எடுத்தால் மட்டுமே நிரந்தர பலனை பெறமுடியும். இல்லையெனில் உடலில் உள்காயம் ஏற்பட்டு பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.