

வேணுகோபால் கோவில் பிரகாரத்தை ஒரு தரம் வலம் வந்து ஒரு ஓரமாக படிக்கட்டு அருகில் அமர்ந்து விட்டார். அது சுந்தரம் நகரில் உள்ள சிறிய விநாயகர் ஆலயம்.
வீட்டுக்கு மிக அருகில் இருப்பதால் அவருக்கு மிகவும் சவுகரியம்.
அவர் மனைவி சரோஜா காலமாகி ஒரு வருடம் முடிந்து விட்டது. அவர் மகள் லலிதா சென்னையில் கணவனுடன் வசிக்கிறாள். பள்ளி செல்லும் இரு குழந்தைகள் அவளுக்கு உள்ளன.
மகன் ஜெர்மனியில் வசிக்கிறான் தன் மனைவியுடன். மருமகள் ஒரு ஜெர்மானியப் பெண்.
சரோஜா மறைவுக்குப் பின் அப்பா வேணுகோபாலை மகள் வீட்டுக்குப் போய் இருக்கச் சொன்னான் பையன்..
இவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை விட்டுப் போக மனமில்லை... கொஞ்ச நாள் போய் இருந்தார் சரிப்பட்டு வரல.
இங்கே தனியாக இருப்பதே மேல் என முடிவெடுத்துத் தங்கி விட்டார். பென்ஷன் வருகிறது. ஒரு மெஸ்ஸில் மூன்று வேளை காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் ஹோம் டெலிவரி செய்கிறார்கள். ருசி சுமார் தான். நாக்கை பழக்கிக் கொண்டார். காலை ஒரு காபி, மாலை ஒரு டீ போட்டுக் குடித்துக் கொள்கிறார்.
காலை மணி பதினொன்று வாக்கில் மகள் போனில் பத்து நிமிஷம் பேசுவாள்.
“இங்கே வந்திடுங்க அப்பா…”
இரவு எட்டு மணி வாக்கில் மகன் பேசுவான்.. “லலிதா வீட்டுக்குப் போயிடுங்க அப்பா... நீங்க தனியா இருக்கிறது எங்களுக்குத் தாங்க முடியலே. உடம்புக்கு முடியலேன்னா யாருப்பா பார்ப்பாங்க..?”
வேணுகோபால் மசியவில்லை. வீட்டு வேலைக்கும் ஆள் வைத்துக் கொள்ளவில்லை. இவர் வேலை பார்த்த ஆபீஸ் வாட்ச்மேன் ஞாயிறு வந்து வீட்டை சுத்தம் செய்து செல்வான்.
கொஞ்சம் சிரமமாக ஆரம்பத்தில் இருந்தது தான். மெல்ல பழகிக்கொண்டார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரிடம் போய் காட்டுவார். சுகருக்கு மாத்திரை சாப்பிடுகிறார்.
டாக்டரிடம் அவர் மகள் போனில் பேசிக் கேட்டுக் கொள்வாள்.
“நார்மல் ஹெல்த் மெயிண்டெய்ன் பண்றார் அம்மா உங்க அப்பா. கொஞ்சம் வாக்கிங் போகச் சொல்லி இருக்கேன். பயப்படாதீங்க. எதுவும் முடியலேன்னா போன் பண்ணச் சொல்லி இருக்கேன். நான் போயிடுவேன்.”
பிள்ளைகளுக்கு எப்போதும் அப்பா என்ன பண்ணுவாரோ என்ற நினைப்பு தான்.
வேணுகோபால் ஓரளவு தனிமைக்குப் பழகிக் கொண்டார்.
காலை ஒரு வழக்கமான வாக்கிங்.
பேப்பர்.. குளியல்.. டிபன்.. வீட்டைக் கொஞ்சம் பராமரிப்பார்.. கூட்டித் துடைப்பார்.. இரண்டு நாளைக்கு ஒரு தரம் துணிமணிகளை வாஷிங் மெஷினில் போட்டு எடுப்பார்.. காய, வைத்து மடிப்பார்..
மதியம் குட்டி தூக்கம். மாலை ஆறு மணிக்கு கோவிலில் போய் அமர்ந்து விடுவார். இரண்டு மணி நேரம் இருப்பார். பிறகு வீட்டுக்கு வந்து விடுவார்.
வயது அறுபத்தி எட்டு ஆவுது. இன்னும் இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாள் எனத் தெரியவில்லை!
கோவிலில் ஒரு நாள் ஒரு பெண்மணி அறுபது வயது இருக்கும். குத்து விளக்கு பூஜை நடந்தது அன்று. இந்தப் பெண் ஒரு விளக்கைத் துடைக்க எடுத்த போது சீரியல் செட் மின்சார விளக்கு ஒயர் அறுந்து விளக்கில் விழ ஷாக் அடித்து தூக்கி எறிய தள்ளி விழுந்து மயக்கம் அடைந்தார் அந்தப் பெண்..
எல்லோரும் திகைத்து நிற்க, வேணுகோபால் பார்த்து விட்டு அருகில் இருந்த ஒரு பெண்ணிடம் கொஞ்சம் அவங்க வாயில் உங்க வாயால் ஊதி நெஞ்சை அமுக்கி எடுங்க…
அது சி.பி.ஆர் செயற்கை சுவாச முறை.
வேணுகோபால் சொன்ன மாதிரி செய்தாள்... அந்தப் பெண் மெல்ல கண் விழித்தாள்..
“அம்மா மங்களத்தம்மா இந்த தண்ணீரைக் குடிங்க...”
மயங்கி விழுந்த மங்களம் என்ற அந்தப் பெண் சுய நினைவுக்கு வந்தாள்.
மங்களமும் அவள் பக்கத்து வீட்டுப் பெண்ணும் மெல்ல ஒரு ஆட்டோவில் டாக்டர் வீட்டுக்குப் போனார்கள்.
மறு நாள் மங்களத்தின் பையன் ஸ்ரீராம் பெங்களூரில் இருந்து வந்து விட்டான். மங்களத்துக்கு ஒரே மகன். ஸாஃப்ட் வேர் எஞ்சினீயர்.
கோவிலில் வேணுகோபாலைப் பார்த்து நன்றி சொன்னான். “சரியான நேரத்தில் சி.பி.ஆர் செய்ய வச்சீங்க சார்.. இல்லாவிட்டால் அம்மாவை நான் இழந்து இருப்பேன்..”
வேணுகோபால் ஒன்றும் சொல்லவில்லை. மவுனமாகப் போய் ஒரு ஓரமாய் வழக்கமான இடத்தில் அமர்ந்தார்.
மங்களத்துக்கு உறவு தான் இவருக்கு ஹெல்ப் பண்ணும் வாட்ச் மேன். அண்ணன் முறை அந்த மங்களத்துக்கு. மங்களத்தின் கணவர் ஒரு எலெக்ட்ரிக்கல் எஞ்சினீயர். மாரடைப்பால் இரு வருடங்களுக்கு முன் காலமானார். வேணுகோபாலுக்கு அந்த அளவு அவரைத் தெரியாவிட்டாலும் இன்னார் எனத் தெரியும்.
பக்கத்து தெரு தான் மங்களத்து வீடு. அவளும் தனியாகத்தான் வசிக்கிறாள். வேணுகோபாலுக்கு சாப்பாடு தரும் மெஸ் தான் மங்களத்துக்கும் சாப்பாடு தருகிறது. மங்களத்துக்கு வயது அறுபது. அவள் மகன் ஸ்ரீ ராம் மாசத்தில் இரண்டு தரம் வந்து அம்மாவைப் பார்த்துச் செல்வான்.
மங்களம் வீட்டில் மாடியில் ஒரு குடித்தனம், சைடு போர்ஷனில் ஒரு காலேஜ் படிக்கும் பையன் என இரு குடிகள் வைத்து வாடகை வருகிறது. கணவரின் பென்ஷன் மாதம் ரூ 40000 வருகிறது. ஸ்ரீராமிடம் சொல்லிவிட்டாள் “இங்கேயே இருக்கேன் அப்பா.. நீ தான் அடிக்கடி வர்றியே அது போதும்.”
கோவிலில் ஷாக் அடித்த நிகழ்வுக்குப் பின் கோவிலில் வேணுகோபாலைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு நன்றி உணர்வுடன் பார்ப்பாள்.
ஸ்ரீராம் மற்றும் வேணுகோபால் பிள்ளைகள் பள்ளிப்பருவத்தில் ஒன்றாய் விளையாடியவர்கள். வாட்ஸ் அப் குழு அமைத்து அப்பா அம்மா இருவர் நலத்தையும் உறுதி செய்து கொண்டார்கள்.
ஒரு முறை மூன்று பேரும் ஒன்று கூடி சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது ஒரு ஐடியாவை ஸ்ரீ ராம் சொன்னான். அது வேணுகோபால் பிள்ளைகளுக்கும் நல்லதாகப் பட்டது…
இந்தக் கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ளவே ஆசைப்படுகிறேன். அந்த ஐடியா என்ன என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
இதை சினிமா டைரக்டர் நண்பர் ஒருவரிடம் காட்டியபோது அவர் இரண்டு விதமாக முடிவு சொன்னார்.. அவர் ஒரு பிரபல திரைக்கதை அமைப்பாளரும் கூட.
ஒரு முடிவு நீங்கள் நினைப்பதைப் போல ஒரு புரட்சிகரமான முடிவு.
மற்றது ஒரு சோகமான முடிவு.
*********************
ஆனால் கடவுள் என்ன முடிவு வைத்திருந்தார் என்பதை ஒரு வருடம் கழித்து என்ன நடந்தது என்பதை அறிந்தால் உங்களுக்குப் புரியும்.
ஒரு வருஷம் கழித்து..வேணுகோபால் வழக்கம் போல் கோவிலுக்கு வந்து 6 முதல் 8 வரை அமர்கிறார். ஒரு ஓரமாக.
மங்களம் மட்டும் வருவதில்லை…
ஸ்ரீராம் இப்போது மாதத்துக்கு இரு முறை பெங்களூரில் இருந்து வருவதில்லை. என்ன தான் நடந்தது..?
வேணுகோபால் பொழுது போக்காக தாந்திரீகம் பற்றி படிக்க ஆரம்பித்தார். அது சக்தி உபாசனை. சர்வமும் சக்தி மயம்.
அதில் தியானம் செய்து மந்திரங்கள் சொன்னால் அவை வெறும் ஒலி அல்ல. அவை இந்த பிரபஞ்சத்து இயற்கை சக்தியுடன் உறவாடி ஒரு பதிலைக் கொண்டு வந்து சேர்க்கும் என அறிந்து கொண்டார்.
பிரம்ம முகூர்த்த வேளையில் தியானிக்க ஆரம்பித்தார். மந்திரங்களை உச்சரிக்க உச்சரிக்க இவர் சொல்லாத போதும் அவர் மனதால் சொல்லப்படுவதாக உணர்ந்தார். மந்திரத்தை இவர் சொல்லவில்லை. அவை இவரை பிடித்துக் கொண்டதாக அறிந்தார்.
அவருக்கு ஒரு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட்டது.
எதிரில் யாரும் வந்தால் அவர்களைச் சுற்றி ஒரு அதிர்வு, ஒரு வைப்ரேஷன், ஒரு ஆரா இருப்பதை உணர்ந்தார்.
அது அவர்களின் மன எண்ண அலைகளை ஈர்த்து இவரால் புரிந்து கொள்ளும் ஆற்றல் வந்தது…
'சம்போ சிவ சம்போ' பாட்டில் 'நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை' என்ற கண்ணதாசன் பாடல் வரிக்கு பொருள் விளங்கியது. ஒவ்வொரு எண்ணமும் ஒரு தேவதையை வரவழைக்கும் என்பது உண்மை.
இந்த மொத்த பிரபஞ்சத்திலும் எண்ண அலைகளே வியாபித்துள்ளன என சில ஞானிகள் சொன்னது மெய் என அறிந்தார். இந்த உலகம் வண்ணமயமானது.. ஒரு புகைப்படக் கலைஞரின் பார்வையில். ஆனால் இந்த உலகம் எண்ண மயமானது ஞானிகள் பார்வையில்.
இவரால் கண்மூடி தியானத்தில் யாரேனும் ஒருவரைப் பற்றி நினைத்தால் அவர்களின் எண்ண அலைகளுடன் ஒத்துப் போனால் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என அறிய முடியும் என உணர்ந்தார்…
நேரடி சந்திப்பு இன்றி ஒரு மனதால் மற்றதைக் கவர முடியாதோ என மகரிஷி சொன்னதன் அர்த்தம் புரிந்தது.
ஞானிகள் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் எண்ணத்தால் உறவாடுகிறார்கள் என அறிந்து கொண்டார்.
இப்படி இருக்கையில் தன் குழந்தைகள் தான் தனிமையில் கஷ்டப்படுவதாக உணர்ந்து என்னென்னவோ செய்ய முயல்வதை அறிந்து கொண்டார். தன் அமைதியை, தனிமையை ஒரு சோகம் என அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
ஒரு நாள் அந்த அம்மணி மங்களம் நடந்து வரும்போது கூர்ந்து கவனித்தார். அந்த அம்மணியின் மேல் வெயில் பட்டது. ஆனால் பின்னால் நிழல் விழவில்லை. தியானித்தார்… ஒருவர் மரணத்துக்கு முன் அது போல் நிகழும் என சாத்திரம் சொல்லியது.
இப்படி இருக்கையில் இந்தக் குழந்தைகள் திட்டமிடுவதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா?
இதை வெளியில் சொன்னால் நம்ப மாட்டார்கள்.
சாத்திரம் பொய்க்கவில்லை… வேணுகோபால் நினைத்தது நடந்து விட்டது.
கணவன் என்ற வேஷத்தைக் கலைத்து நாளாகிவிட்டது. இப்போது கடவுளின் பாதையில் பயணிக்கும் போது குறுக்கீடு வரலாமா… என்ன சோதனை... என்று நினைத்தவருக்கு ஒரு பிரச்சனையில் இருந்து விடுதலை என உணர்ந்தார்